
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்ரோலியாவுக்கு செல்ல முயன்ற 36 பேரை தென்கிழக்கு கடலில் வைத்து கடற்படையினர் இன்று அதிகாலையில் கைது அம்பாறை- பாணம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர்கள் நீர்கொழும்பில் இருந்து இயந்திர படகு ஒன்றில் ஊடாக, நாடைவிட்டு வெளியேற முயன்றபோதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்று அதிகாலை 2 மணியளவில் கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதன்போது அவுஸ்ரோலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த படகை சுற்றிவளைத்து இடைமறித்து சோதனையிட்டனர்.
அதில் சட்டவிரோதமாக 36 பேர் இருப்பதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்து கரைக்கு கொண்டுவந்து பாணம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து படகை, கடலில் இருந்து வாழைச்சேனை கடற்படை முகாமிற்கு இழுத்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு, யாழ்ப்பாணம். மட்டக்களப்பு பிரதேசங்களை சேர்ந்வர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவை நோக்கி படகில் செல்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில், கடந்த 9ம் திகதி அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து 45 தஞ்சக்கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் இலங்கையிலிருந்து படகு வழியாக அவுஸ்திரேலியாவுக்கு வர முயன்று கிறிஸ்துமஸ் தீவு அருகே இடைமறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம், இப்படகு எப்போது அவுஸ்திரேலியா கடல் பகுதிக்குள் நுழைந்தது என்பது தெரியவில்லை.
TL

