ஆளுநர் ஜீவன் தியாகராயா தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் வடக்கு அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மீண்டும் முறையீடு.
வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராயா தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா மற்றும் பிரதமர் திணேஸ் குணவர்த்தன வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநரின் அரசியலமைப்பு மீறல் குறித்த தலைப்பிலான எமது 24.11.2022 ஆம் திகதிய கடிதத்தின் தொடர்ச்சியாக மீண்டும் ஓர் கடிதம் எழுதியுள்ளார்.
வடக்கு மாகாண சபையால் 2017 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க வடமாகாண சுற்றுலாத்துறை பணியக நியதிச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 10.10.2018 ஆம் திகதி ஆளுநரால் ஒப்புதல் வழங்கப்பட்டு 2054/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட நியதிச் சட்டம் ஒன்று அமுலில் இருக்கையில், அதே விடயத்தில் அதற்கு ஒத்ததான புதிய நியதிச்சட்டமொன்றை உருவாக்கிய ஆளுநரின் மாகாண நிர்வாகம் தொடர்பான மற்றும் நியதிச் சட்டவாக்கம் தொடர்பான கேலிக்கூத்தான செயற்பாட்டை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
“ஏனைய உறுப்பினர்களை” தமது நோக்கங்களைப் பூர்த்தி செய்வதற்காக வெளியே இருந்து நியமிக்கும் அதிகாரத்தை தமதாக்கிக் கொள்வதற்காகவே இவ்வாறு செயற்பட்டுள்ளார். ஊடகச் செய்திகளின்படி தமது வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவராக சுனில் திசாநாயக்க என்பவரை நியமித்தமையும், அவர் பாய்ந்தடித்து பலாலி விமான நிலையம் இம்மாதம் 12 ஆம் திகதி முதல் மீளவும் சேவைகள் ஆரம்பிக்கும் என ஊடக அறிக்கை வெளியிட்டமையிலிருந்து வெளிப்படையாகிறது. ஆச்சரியப்படும் வகையில் இதுவும் இலங்கையின் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவரான முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சந்திரசிறி அவர்களது அதிகாரங்களை முறையற்ற விதத்தில் தமதாக்கிக் கொண்டமையாகக் காணப்படுகின்றது. இந்த ஆளுநரின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அரசியலமைப்பு மீறல்களுக்கான குறியீடாக இவை அமைவதால் நான் மேலும் ஆழமாகச் செல்ல விரும்பவில்லை. இவற்றுக்கெதிரான தங்கள் மிகத் துரிதமான, சாத்தியமான நடவடிக்கைக்குச் சமர்ப்பிக்கப்படுகின்றன என உள்ளது.
TL