இரண்டாம் எலிசபெத் மகாராணியாரின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்க 500 முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு

பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியாரின் இறுதிக் கிரியைகளில் 500க்கும் அதிகமான அரச தலைவர்களும், வெளிநாட்டுத் தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக விமானங்களின் மூலம் வருகை தருமாறு அரசத் தலைவர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பா கண்டத்தில் உள்ள பெல்ஜியம், நெதர்லாந்து, ஸ்பெயின், நோர்வே, சுவீடன், டென்மார்க், மொனோக்கோ போன்ற நாடுகளின் அரச குடும்பத்தவர்களும் மகாராணியாரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வார்கள். மகாராணியார் அரச தலைவராக பணியாற்றிய கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் பிரதமர்களும் இந்த நிகழ்வுகளில் பங்கேற்கவிருக்கிறார்கள். இலங்கை – இந்திய ஜனாதிபதிகள், பங்களாதேஷ் பிரதமர் ஆகியோரும் மகாராணியாரின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்கவிருக்கிறார்கள். மகாராணியாரின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்குமாறு சிரியா, வெனிசுவேலா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று பிபிசி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
