கடந்த கால நட்டத்தை நிவர்த்தி செய்யும் வகையில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என்று துறைசார் அமைச்சர் அறிவித்துள்ளார்
வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் 12ஆவது நாள் இன்றாகும். பெரும்போகத்திற்குத் தேவையான உர விநியோகம் இடம்பெற்றுள்ளதாக விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
பண்டி உர விநியோக நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டது. எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்பட மாட்டாது. சோள உற்பத்தியாளர்களுக்கும் உரம் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு 20 ஆயிரம் ரூபா பெறுமதியான சேதனப் பசளையும் விநியோகிக்கப்படுகிறது. ஒரு ஹெக்டெயரை விட குறைந்த நிலங்களுக்கான உர விநியோகம் இலவசமாகும். அறுவடைக் காலப்பகுதியில் எரிபொருள் இலவசமாக வழங்கப்படவிருக்கிறது. நெல்லின் விலை தொடர்பில் சிக்கல்கள் காணப்படுவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.
அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளினால், நாட்டின் நெல் உற்பத்தி 45 சதவீதம் வரை குறைவடைந்துள்ளதாக விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். உணவு பாதுகாப்பும் குறைந்த மட்டத்தில் காணப்படுகிறது. உரம், கிருமிநாசினிகள் என்பனவற்றின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். சோளச் செய்கையும் அழிவுக்குள்ளாகியிருக்கிறது. முட்டை உற்பத்தி குறைவடைந்துள்ளமையினால், மந்த போஷணையும் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
கஞ்சா செய்கையை சட்டபூர்வமாக்க அரசாங்கம் இணக்கம் தெரிவிக்கவில்லை என்று இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி கூறினார். ஆயுர்வேத சட்டத்திற்கு அமைய, மூலிகை என்ற அடிப்படையில் மாத்திரம் கஞ்சா பயிரிடப்படவிருப்பதாக அவர் கூறினார்.
கடந்த கால நட்டங்களை ஈட்டிக் கொள்ளும் வகையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானிக்கவில்லை என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தின் மூலம் கூடுதலான வினைத்திறனை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.