குருநாகல் பொத்துஹெர பிரதேசத்தில் உள்ள போலி தலதா மாளிகை பற்றிய விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு
குருநாகல் பொத்துஹெர பிரதேசத்தில் போலியான தலதா மாளிகையொன்றை அமைத்து வருவதாக அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்களும் தலதா மாளிகையின் தியவடன நிலமேயும் முன்வைத்த கூற்றுக்கு அமைய விரைவில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்கிரமரத்னவிற்கு உத்தரவிட்டுள்ளார். இதன்படி, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டு குழுக்கள் இந்த இடத்திற்குச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
குருநாகல் பொத்துஹெர பிரதேசத்தில் போலி தலதா மாளிகையை அமைத்து உள்நாட்டு, வெளிநாட்டு பௌத்த மக்களை ஏமாற்றி பணத்தையும் தங்க நகைகளையும் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜானக்க சேனாதிபதி என்பவருக்கும் ஸ்ரீதலதா மாளிகையை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட சேபால அமரசிங்க என்பவருக்கும் எதிராக சட்ட ஏற்பாடுகளின் கீழ் விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.