எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மொட்டு என்ற கொடியின் கீழ் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (2023.01.02) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சாகர காரியவசம் மேலும் கூறுகையில்,
“அனைத்து இலங்கையர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். தற்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் நாட்டின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை விரைவில் வெளியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. ஒரு கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இம்முறை கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடி அடுத்த உள்ளூராட்சி தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளது.
தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியான பின்னர் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற பெயரில் மொட்டு இம்முறையும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும். ஐக்கிய தேசியக் கட்சியுடனும் ஓரளவு கலந்துரையாடினோம். ஆனால் தற்போது எம்முடன் முன்னர் கூட்டணி அமைத்துள்ள கட்சிகளுடனும் உள்ளூராட்சி மன்ற தலைவர்களுடனும் கலந்துரையாடி மொட்டு சின்னத்தில் போட்டியிடுவது என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளோம். சில வேளைகளில் சில உள்ளூராட்சி மன்றங்களுக்கு எமது வேட்பாளர்களுடன் அவர்களது கட்சிகளின் சின்னங்களில் போட்டியிடும் சந்தர்ப்பங்கள் ஏற்படும்.
எவ்வாறாயினும், பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்கள் மொட்டு சின்னத்தில் போட்டியிடும். ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி வைப்பது தொடர்பில் இதுவரை நேரடித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. இரு தரப்பினருக்கும் இடையே கருத்துப் பரிமாற்றம் ஏற்பட்டுள்ளது. தவிர, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மையான பிரதேசங்களில் வெற்றிபெறும் என நம்புகின்றோம்.
எரிபொருளையோ அல்லது மின்கட்டணத்தையோ அதிகரிப்பதன் மூலம் மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் எப்போதும் ஒரு கட்சியாக இருக்கிறோம். முன்னாள் எரிசக்தி அமைச்சர் எரிபொருளின் விலையை உயர்த்திய போது நாங்களும் கட்சி ரீதியாக எதிர்ப்பு தெரிவித்தோம். விலைவாசி உயர்வை பொருளாதாரத்தின் மீது திணிக்காமல் பொருளாதார ரீதியில் உயரும் வாய்ப்பை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கருத்தை நாங்கள் எப்போதும் கொண்டுள்ளோம். அதன் பிறகே முடிவு எடுக்க வேண்டும்,” என்றார்.