பழுகாமத்தை சேர்ந்த பாலச்சந்திரன் நிரோஜன் என்ற இளைஞன் துவிச்சக்கர வண்டியில் இலங்கை தீவகம் முழுவதையும் ஒன்பது நாட்களில், வட்டப் பாதையில் தனியாகப் பயணம் செய்துள்ளார்.
தனது பயணத்தை 2022 டிசம்பர் மாதம் 28ஆம் திகதி பழுகாமத்தில் ஆரம்பித்து 1299கிலோமீற்றர் பயணம் செய்து, மீண்டும் 2023 ஜனவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பித்த இடத்திலே அவரது பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
பாலச்சந்திரன் நிரோஜன் பயண விபரங்களாவன:
முதலாம் நாள் மட்டக்களப்பின் பழுகாமத்திலிருந்து 123கிலோமீற்றர் பயணம் செய்து, திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவரைக்கு சென்று, இரண்டாம் நாள் அங்கிருந்து 154கிலோமீற்றர் தூரம் பயணித்து முல்லைத்தீவிற்கு சென்றுள்ளார்.
மூன்றாம் நாள் அங்கிருந்து 113கிலோமீற்றர் பயணித்து யாழ்ப்பாணத்தை சென்றடைந்து, நான்காம் நாள் 116 கிலோமீற்றர் பயணித்து மன்னாருக்கும், ஐந்தாம் நாள் 179கிலோமீற்றர் சென்று புத்தளத்தை சென்றடைந்துள்ளார்.
ஆறாம் நாள் 141கிலோமீற்றர் பயணித்து கொழும்புக்குச் சென்று, அங்கிருந்து ஏழாம் நாள் மாத்தறைக்கு 156 கிலோமீற்றர் தூரம் பயணித்து, எட்டாம் நாள் 124கிலோமீற்றர் தூரம் கதிர்காமத்திற்குச் சென்று, ஒன்பதாம் நாள் 193கிலோமீற்றர் பயணித்து மீண்டும் தான் பயணத்தை ஆரம்பித்த பழுகாமத்தினை வந்தடைந்துள்ளார்.
அவ்வாறு பாலச்சந்திரன் நிரோஜன் மொத்தமாக ஓடிய 1299கிலோமீற்றர் தூரத்தில் எட்டாம் நாள் 10ஆவது கிலோமீற்றர் ஓடும் போது துவிச்சக்கர வண்டியில் பழுது ஏற்பட்டு திருத்தம் செய்துள்ளார்.
அத்துடன் 9ஆம் நாள் 25ஆவது கிலோமீற்றர் தூரத்தைக் கடக்கும் போது அபாயகரமான மிருகங்களைச் சந்திக்க நேர்ந்ததாக பாலச்சந்திரன் நிரோஜன் தெரிவித்தார்.
AR