பொங்க முடியாத அரிசியை உங்களிற்கு வாய்க்கரிசியாக போடுகின்றோம் – படையினர் மீது விசிறிய காணாமல்போன உறவுகள்.
பொங்க முடியாத இந்த அரிசியை உங்களிற்கு வாய்க்கரிசியாக போடுகின்றோம் என படையினர் மீது விசிறி காணாமல்போன உறவுகள் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
நல்லூர் அரசடி பகுதியில் பொலிஸாருக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டதோடு நீர்த் தாரைப் பிரயோகமும் இடம்பெற்றது. இதனபோதே தாம் எடுத்துச் சென்ற பொங்கல் அரிசியினை வீசி இவ்வாறு தெரிவித்தனர்.
யாழ். பல்கலைக் கழகத்தில் இருந்து பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் காணாமல்போன உறவுகள் இன்று யாழ் வந்த ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அப்பகுதியில் கலகம் அடக்கும் போலீசார் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு மாணவர்கள் வருவதை இடைநிறுத்துகின்ற செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
நீர்த்தாரை பிரயோகிக்கும் வாகனம் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளுடன் போலீசார் மற்றும் விசேட அதிரடிப் படையினரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். இதனால் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
தேசிய பொங்கல் விழாவினை கொண்டாடுவதற்காக யாழிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நல்லூர் சிவன் ஆலயத்தை வந்தடைந்ததார்.
குறிப்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் அமைப்புக்கள் இணைந்து ஜனாதிபதியின் இந்த யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோசங்களை எழுப்பி வருகின்றனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் இணைந்து முன்னெடுத்த போராட்டமானது யாழ். அரசடி வீதியில் பாரதியார் சிலையடி பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இதனையடுத்தே ஆர்ப்பாட்டக்கார்களுக்கும், சிறிலங்கா அரச படைகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதோடு நீர்தாரை பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டு நான்கு அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டது.
இதேநேரம் யாழ் நல்லூர் சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற தேசிய பொங்கல் நிகழ்வுக்கு வருகை தந்த ரணில் விக்கிரமசிங்கா
நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் இடம்பெற்ற தேசிய பொங்கல் நிகழ்வில் பங்கெடுத்தார்.
முன்னதாக நல்லூர் சிவன் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வை ஆரம்பித்த ஜனாதிபதி அதன் பின்னர் மேளதாளங்களுடன் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டதோடு அங்கு பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றது.
இந்நிலையில் குறித்த நிகழ்வில் ஜனாதிபதியுடன் இராணுவத் தளபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான இந்திய துணைத் தூதர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், சமய தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதேநேரம் அரசடியில் இடம்பெற்ற போராட்டத்தின்போது போராட்டத் தாய்மார் தம்மை தொடர்ந்தும் பயணிக்க அனுமதி மறுத்தமையால் தாம் பொங்கலிற்கு எடுத்து வந்த அரிசியை அள்ளி பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மீது வீசி பொங்க முடியாத இந்த அரிசியை உங்களிற்கு வாய்க்கரிசியாக போடுகின்றோம் என குரல் எழுப்பினர்.
இவை அனைத்தும் இடம்பெற்றபோதும் ஆரப்பாட்டக்காரர்களை தொடர்ந்து பயணிக்க விடாது பொலிசார் கைகோர்த்து நின்றமையால் பொலிசார் விசிறிய நீர் வீதிகளில் தேங்கி நின்ற சமயம் அதனை பொங்கல் பானைகளில் எடுத்து பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மீது பதிலிற்கு விசிறினர்.
TL