104 ரோகிங்கியரை ஆள்கடத்தல் செய்ய முயற்சித்த நபரை ஜனவரி 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மியன்மாரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய இனத்தவர்கள் பங்களாதேசில் அமைந்திருந்த ஐ.நாவின் கண்காணிப்பில் இருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம் இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்ட விரோதமாக பயணித்தனர்.
இவ்வாறு பயணித்த சமயம் யாழ்ப்பாணம் மருதங்கேணி அருகே நடுக்கடலில் படகு பழுதடைந்து தத்தளித்தனர். இதனால்
தத்தளித்தவர்கள் 2022 டிசம்பர் 17ம் திகதி இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு டிசம்பர் 18ம் திகதி கடற்படையினரின் படகு மூலம் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதணைகளின் பின்னர் கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.
சட்டத்துக்கு புறம்பாக பயணித்தபோது இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 104 பேர் மற்றும் அவர்களை சட்டத்துக்கு புறம்பாக நாடு கடத்த முற்பட்ட வலையமைப்புக்கு உதவியவருக்கும் எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் காங்கேசன்துறை பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.
டிசம்பர் 19ம் திகதி மாலை 105 பேரும் தங்க வைக்கப்பட்ட இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட மல்லாகம் நீதிமன்ற நீதிவான் காயத்திரி சைலவன்,104 பேரையும் அகதிகளுக்கான ஐ.நா ஆணையகம் பொறுப்பேற்பதாயின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதி பெற உத்தரவிட்டதுடன் அகதிகள் அனைவரையும் மீரிகான தடுப்பு முகாமில் தங்க வைக்க உத்தரவிட்டார். அத்துடன் பிற நாடு ஒன்றிற்கு 104 பேரையும் கடத்த முயற்சித்தவரை 2023 ஜனவரி 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.
இந்த நிலையிலேயே ஜனவரி 2ம் திகதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதவான் இந்த உத்தரவையிட்டார்.
104 ரோஹிங்கிய அகதிகளும்
மீரிகான தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
TL