13வது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி தெரிவிப்பு
அனைவரும் ஒன்றிணைந்து வாழும் நாட்டை கட்டியெழுப்ப சமூக நீதி ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற தைப்பொங்கல் தேசிய விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் துர்கா மண்டபத்தில் நேற்று பிற்பகல் நிகழ்வு இடம்பெற்றது.
நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பெப்ரவரி 8 ஆம் திகதி அறிக்கையொன்றை முன்வைக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பணிகளை விரைவுபடுத்தும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தேசிய பொங்கல் விழாவிற்காக யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதிக்கு அங்கு சிலர் எதிர்ப்பு வெளியிட்ட போதிலும், சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றுக் காலை மதத்தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணம், ஸ்ரீநாக விகாரைக்கு சென்ற ஜனாதிபதி, மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.
விகாரையின் விஹாராதிபதி சங்கைக்குரிய மிஹபத்துரே சிறிவிமல தேரரை சந்தித்து ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டார்.
நல்லை ஆதீனத்திறக்குச் சென்ற ஜனாதிபதி, ஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய குருக்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜஸ்டின் பேனாட் ஞானபிரகாசம் ஆண்டகையையும் ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடினார்.