430 அரச நிறுவனங்கள் விற்பனை செய்யப்பட அல்லது மறுசீரமைக்கப்படவுள்ளன. இந்த செயன்முறை இரண்டு மாதங்களுக்குள் ஆரம்பித்து ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என திறைசேரி அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
நிதி அமைச்சு, இந்த 430 அரச நிறுவனங்களை நட்டம் மற்றும் இலாபம் ஈட்டும் உத்தேச மறுசீரமைப்பு செயல்முறைக்காக அடையாளம் கண்டுள்ளது.
முன்மொழியப்பட்ட திட்டத்தின் கீழ், சில நிறுவனங்கள் விற்கப்படும் சில நிறுவனங்கள் மூடப்படும் அல்லது இணைக்கப்படும் அல்லது மறுகட்டமைக்கப்படவுள்ளன.
430 நிறுவனங்களில் 39 கூட்டுத்தாபனங்கள், 218 கம்பனிகள் மற்றும் 173 சட்டபூர்வ சபைகள் உள்ளன. இந்நிறுவனங்களில் 21 பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களும் அடங்குகின்றன.
பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை, சிறிலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, தேசிய வீடமைப்பு மேம்பாட்டு ஆணைக்குழு என்பன நட்டத்தில் இயங்கியுள்ளன என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனை தவிர அரச பொறியியல் கூட்டுத்தாபனம், ஹோட்டல் டெவலப்பர்ஸ் லங்கா பி.எல்.சி., லங்கா சதொச லிமிடெட், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், மைக்ரோ லிமிடெட், அரச அச்சகக் கூட்டுத்தாபனம், ஐரிஎன், தேயிலை சிறு தோட்ட அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தேசிய கால்நடை அபிவிருத்தி அதிகார சபை மற்றும் லங்கா லேலண்ட் லிமிடெட் என்பனவும் நட்டமடைந்துள்ளன.
இந்த நிறுவனங்களின் மறுசீரமைப்பு செயல்முறையை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சில் பொது தனியார் கூட்டாண்மைக்கான தேசிய நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது என்றும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.