MUKAVARI 2022-02-17 10:51:01
தமிழ் இனவழிப்பு கல்வி வாரச் சட்டம் 104ற்கு எதிராக கனடா வாழ் சிறீலங்கா பௌத்த பேரினவாத சக்திகள்
வழக்குத்தாக்குதல் செய்துள்ளனர். தவறான விடயங்களை கற்பித்தல் கூடாது என நீலிக் கண்ணீர் வடிக்கும் இக்கூட்டம், ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது கனடாவோ இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொள்ளாத நிலையில், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பிற இனச்சமூகங்கள் பற்றி இச்சட்டம் குறிப்பிடவில்லை என்று குதர்க்க வாதத்தைப் பேசுகின்றது.மே 10 2021 ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தில் சட்டம் 104 க்கு எதிராக அரசியலமைப்பு சவாலைத் “தமிழின அழிப்பு” (வுயஅடை புநழெஉனைந) மறுதலிப்பாளர்கள் தொடங்கினர், ஒரு இனப்படுகொலையை அறிவிப்பது கூட்டாட்சி (நடுவண்) அரசாங்கத்தின் பொறுப்பாகும், மாகாணம் அல்ல என்றும், தவறான வரலாற்றை சட்ட வரைபாக்கியுள்ளதாக அவர்கள் வாதாட்டங்களை முன் வைக்கின்றனர். உண்மையை குதர்க்க வாதங்கள் மூலம் திரிபுபடுத்தி வெல்லலாம் எனக் கனவு காண்கிறனர்.
இன அழிப்பு பாதகத்தை புரியும் எந்தவொரு தரப்பும் எப்பொழுதும் இனவழிப்பல்ல என்று மறுதலித்துக் கொண்டே வருவதனை உலக வரலாற்றில் நாம் காணலாம். ஏனெனில் இனவழிப்பு மறுத்தல் என்பது இனவழிப்பின் உச்சக்கட்டமாகும்.
இனப்படுகொலைக்கான ஆதாரமில்லை என்று துருக்கி தொடர்ந்தும் மறுத்து வந்தது. துருக்கியின் ஆதரவு நாடுகளும் இனப்படுகொலை இல்லை என மறுதலித்தே வந்தனர். ஆனால் தளராத மனமும், திடமான ஒற்றுமையுடன் கூடிய ஆர்மேனிய மக்களின் ஓர்மம்; மிக்க தொடர் போராட்டமும் ஒரு நூற்றாண்டைக் கடந்து வெற்றி அடைந்தது. இதற்காக போராடியவர்கள் புலம்பெயர்ந்த ஆர்மேனியர்கள்.
இன்று உலக நாடுகள் துருக்கியில் ஆர்மீனியர்களுக்கு நிகழ்ந்தது இனப்படுகொலை என்று ஏற்றுக் கொண்டுள்ளன. குறிப்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் 29 அக்டோபர் 2019 (செவ்வாய்க் கிழமை) அன்று, 20-ஆம் நூற்றாண்டில் தற்கால துருக்கியின் உதுமானியப் பேரரசு தன் படைபலத்தால் ஆர்மீனிய மக்களைக் கொன்றது இனப்படுகொலையே என்று தீர்மானம் நிறைவேற்றியது.
அண்மைக் காலத்தில், இவ் இனப்படுகொலைகளை அங்கீகரிக்கப் பல நாடுகளும் அமைப்புகளும் துருக்கியைக் கோரி வருகின்றன. இதுவரையில் 20 நாடுகள் இக்காலப்பகுதியில் இடம்பெற்ற படுகொலைகள் இனப்படுகொலைகளே என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. ஆனால் துருக்கி அரசோ ஆர்மீனிய இனப்படுகொலைக்கு எச்சான்றும் இல்லை என இன்றுவரை மறுதலித்தே வருகின்றது.
அதேபோல்தான் ஈழத்தமிர்கள் மீதான வலிந்த திட்டமிட்ட இன அழிப்புப்படலமும். 1948 சுதந்திரத்தின் பின் 1949 இலேயே தமிழர்தாயகப் பகுதியினை ஆக்கிரமிக்கும் படலமும் ஆரம்பமாகியது.
கல்லோயா குடியேற்ற திட்டம் நிலங்களற்ற உழவர்களை முன்னர் காடுகளாக இருந்த சில இடங்களில் குடியேற்றுவதற்காக என 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டுக்குள் இக்குடியேற்றத் திட்டத்தில் 50 புதிய ஊர்கள் நிறுவப்பட்டிருந்தன. இவற்றில் தமிழர்கள், சிங்களவர்கள், இசுலாமியர்கள், மற்றும் சில வேடர்களும் குடியேற்றப்பட்டனர். இவ்களில் 50 சதவிகிதம் சிங்களவர்களாக இருந்தனர்.
ஆரம்ப கால குடியேற்றங்களின்போது இனத்தவர்களுக்கிடையேயான விகிதாசாரம் பேணப்பட்ட போதும் பின்னர் அது இல்லாமல் போய் விட்டது. இவ்வாறு 1950 இல் கிழக்கு மாகாண பதவில் குளம் எனும் தமிழர் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட பதவியா சிங்களக் குடியேற்றம் புத்த பிக்குகளாலும் சிங்கள அரசியல்வாதிகளாலும் படிப்படியாக சிங்களப்பகுதியாகவே மாற்றப்பட்டு விட்டது. அதையடுத்து தென்னமரவடி தமிழ் பிரதேசமும் 1980 இல் சிங்களவர்களால் கைப்பற்றப்பட்டது. இவ்வாறு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கிடையே சிங்கள கிராமங்கள் தோன்றின.
தமிழர் பிரதேசங்களின் நிர்வாக எல்லைகளின் மாற்றமும், ஒரு மறைமுகமான சிங்கள குடியேற்ற நடவடிக்கையே. 1972ஆம் ஆண்டு தமிழர் பிரதேசங்களின் சில பகுதிகள் அனுராதபுரம் மாவட்டத்தோடு இணைக்கப்பட்டதற்கு காரணம் கிடையாது. அதே போன்று 1972இல் எடுக்கபட்ட தமிழர் பிரதேசங்களோடு சிங்களவர் பிரதேசங்களையும் சேர்த்து 1982 இல் திருகோணமலையோடு இணைத்தமைக்கும் காரணம் கிடையாது.
ஆனால், இவ் நடவடிக்கைக்கு வெளிப்படுத்த முடியாத ஒரு காரணம் உண்டு. இந்த நிர்வாக எல்லை மாற்றம் காரணமாக ஓரிரவிலேயே சிங்களவர்கள் திருகோணமலை மாவட்டத்தின் பெரும்பான்மையினமாக மாறிவிட்டனர். 1982ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி, அனுராதபுரம் மாவட்டத்தோடு இணைக்க பட்டிருந்த ஐந்து கிராம சேவகர் பிரிவுகளைத் திருகோணமலை மாவட்டத்தோடு இணைத்து, திருகோணமலை மாவட்டத்தில் – தமது சொந்த மண்ணிலேயே தமிழர்கள் ஒரிரவிலேயே சிறுபான்மையினராக மாற்றப்பட்டனர்.
சிங்களத் தேசியவாதிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட இலங்கை சுதந்திரக்கட்சி 1956 ஆம் ஆண்டில்; ஆட்சியைக் கைப்பற்றி சிங்களம் மட்டும் ஆட்சி மொழி என்ற கொள்கையை கொணர்ந்தது. இதனை எதிர்த்து இலங்கை தமிழரசுக் கட்சியினர் 1956, யூன் 5 ஆம் நாள் கொழும்பில் இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னால் அமர்ந்து அமைதியான முறையில் அறவழிப் போராட்டத்தைத் நடத்திய வேளை அரசு அமைச்சர் ஒருவரின் தலைமையில் சிங்களக் காடையர்கள் இவர்களைத் தாக்கியதோடு தமிழர்களின் வணிகத்தலங்களையும் தாக்கினர்.
1956 யூன் 11 ஆம்நாள் கல்லோயா குடியேற்ற திட்டத்தில் “இங்கினியாகல" என்ற குடியேற்ற ஊரிலும் அதனைச் சுற்றியுள்ள கரும்புத் தோட்டங்களிலும் நூற்றிஐம்பதுக்கு மேற்பட்ட தமிழர்கள் சிங்களக் காடையர்களினால் இனப்படுகொலை செய்யப்பட்டனர். திட்டமிட்ட இனவழிப்பின் ஓரங்கமான வலிந்த குடியேற்றங்களிற்கு அடுத்து இனப்படுகொலை நிகழ்வுகளும் 1956 இல் ஆரம்பமாகியது வரலாறு.
கல்லோயா (1956), 1958 கலவரம் (1958), 1977 கலவரம் (1977), கறுப்பு யூலை (1983) வெலிக்கடை (1983) களுத்துறை (1997) பிந்துனுவேவா (2000) எனப்பட்டியலிட்டு இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டதையோ 1981இல் யாழ்நூலகம் எரிக்கப்பட்டதையோ வரலாற்றில் இருந்து மறைக்கமுடியாது.
புலிகள் இல்லாத காலத்திலேயே நடத்தப்பட்ட 1956, 1958,1977 1983 இனப்படுகொலைகளும், மேற்கிலும் தெற்கிலும் கலவரத்தில் எஞ்சிய தமிழர்களை உங்கள் பகுதிக்கே செல்லுங்கள் என வடக்கு-கிழக்குப் பகுதிகளுக்கே சிறீலங்கா அரசாங்கம் அனுப்பிவைத்ததும் வரலாறு. இலங்கையின் திட்டமிட்ட இச்செயலை இனப்படுகொலை என்று முதன்முதல் சுட்டிக்காட்டிப் உலகறியக் கூறியவர் அன்றைய பாரதப்பிரதமர் இந்திராகாந்தி.
தனிச் சிங்களச் சட்டம், பௌத்தம் அரச சமயமாக்கப்படல், இலங்கைக் குடியுரிமைச் சட்டம், கல்வி தரப்படுத்தல் சட்டங்கள், திட்டமிட்ட சிங்கள குடியேற்றம், அரச பயங்கரவாதம், யாழ் பொது நூலகம் எரிப்பு, சிங்களமயமாக்கம், வேலைவாய்ப்பில் இனப்பாகுபாடு, சிங்களப் பேரினவாதம், ஆட்கடத்தல்களும் வலிந்து காணாமல் போதல்களும், அரச சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் போன்ற இலங்கைத் தமிழர்கள் மீதான திட்டமிட்ட இனவழிப்பிற்கும், இலங்கையில் மனித இனத்துக்கெதிரான குற்றங்கள் என்பன எமது கையிலுள்ள வலுவான வரலாற்று ஆதாரங்கள்.
2009 ஆண்டு பெருமளவில் அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைச் சம்பவங்களை மட்டும் அடிப்டையாக வைத்தும், விடுதலைப் புலிகளை உலகம் பயங்கரவாதப் பட்டியலில் கைத்திருப்பதைச் சாட்டாக வைத்தும் தாங்கள் வென்றுவிடலாம் என்ற பகற்கனவுடன் ஒன்ராரியோ உயர் நீதிமன்றத்தில் சட்டம் 104 இற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து உள்ளது இன அழிப்பு மறுதலிப்புக் கூட்டணி. இதற்காக புழுகுருNனுஆநு ஊடாக 147, 863 கனடிய டொலர்கள் சிங்கள மக்கள் வழங்கியுள்ளனர். பாதிக்கப்படாத சிங்கள மக்கள் ஒன்றுபட்டுச் செயல்படுகிறார்கள்.
பாதிப்புக்குள்ளான தமிழினம் நாம், வாழவிருத்தல் தகுமா? இவ்விடத்தில் நாம் தூங்கிவிட்டால் வரலாற்றில் நமக்கு மன்னிப்பே கிடையாது.
புலம்பெயர் தமிழர்கள் நாம் ஒன்றுபடவேண்டிய தருணம் இது. வரலாற்றுப் பேருண்மையை மறுதலிக்க முற்படும் கூட்டத்தை எதிர்க்கும் வலு எங்களிடமே உள்ளது. ஒன்ராரியோ மாகண அரசு எமக்குத் தந்த தமிழின அழிப்பு கல்விவாரத்தை பாதுகாக்க ஒன்றுதிரளவேண்டும். உள்ளக பேதங்கள் களைந்து நாம் ஒன்றுபட்டால் தர்மம் எம்மை வெல்லவைக்கும். அதேவேளை இனப்படுகொலைகளால் பாதிக்கப்பட்ட பிற சமூகங்களுடனும் நாங்கள் கரம்கோர்த்துச் செயல்படுவது மேலும் நமது முனைப்புக்கு வலுச்சேர்க்கும். நம்மினம் முகம் கொடுத்துக் கொண்டிருப்பது தமிழின அழிப்பு என்பதனை உலகறிய நாம் நிரூபிக்கும் பொழுது பூகோள ராசதந்திர அரசியல் நகர்வுகளுக்கப்பால் நீதி கிடைப்பது நிச்சயம்!