Home » தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கி

தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கி

Source

இலங்கையில் தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் தொழில்துறையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிட்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அந்த செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக பொருளாதார ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படும் என்றும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்த “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” என்ற புதிய நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

‘நாட்டின் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு செயற்பாடுகளின் போதும் சிலர் நீதிமன்றத்தை நாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் எனவும் இவ்வாறு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும், தேசிய கொள்கையின் ஊடாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இலங்கையில் முதன்முறையாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இன்டர்நெசல் இன்டஸ்ரியல் எக்ஸ்போ- 2024 (சர்வதேச கைத்தொழில் கண்காட்சி) இன்று (19) ஆரம்பமானது. இந்தக் கண்காட்சியைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் நமது நாடு வங்குரோத்தடைந்த நாடாக மாறியிருந்தது. ஆனால் அடுத்த சில வாரங்களில் நாம் வங்குரோத்தடைந்த நாடு என்ற அவப்பெயரில் இருந்து முற்றிலும் விடுபடுவோம். இது தொடர்பான ஒப்பந்தமும் அடுத்த சில வாரங்களில் எட்டப்பட உள்ளது. இதன்மூலம், தனியார் கடனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது எளிதாகிறது. எனவே இந்த பணியை இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்வோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஆனால் இதில் மட்டும் திருப்தி அடைய முடியாது. இந்தக் கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். பல வருடங்களுக்கு முன்னர் பெற்ற கடனை மீளச் செலுத்த வேண்டியுள்ளது. அதற்கு 2042 வரை கால அவகாசம் கிடைக்கும் என நம்புகிறேன்.

இறக்குமதிப் பொருளாதாரம் காணப்படுவதால் இறக்குமதிக்கு பணம் கொடுக்க வேண்டும். அதற்கான அந்நியச் செலாவணி நம்மிடம் இல்லை. அதனால் அவர்கள் மீண்டும் கடன் வாங்க வேண்டும். இந்த முறை அமுல்படுத்தப்பட்டால் இன்னும் 15-20 ஆண்டுகளில் மீண்டும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம்.

நடுத்தர மற்றும் சிறிய அளவிலான வர்த்தகர்களுக்காக “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” என்ற புதிய அமைப்பை ஸ்தாபிக்க எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவன அமைப்பு இந்த நாட்டில் உள்ள அனைத்து தொழிலதிபர்களுக்காக உருவாக்கப்பட்டது. அடுத்த 5 – 10 ஆண்டுகளில், இதே வழியில் நாம் முன்னேற வேண்டும்.

மேலும், பங்களாதேஷ், மியான்மர் போன்ற நாடுகளுக்குச் சென்று அங்கு உற்பத்தியை மேற்கொள்ள விரும்பினால், எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்பைப் பெறலாம். இதுவே எமது கொள்கை. இந்த செயற்பாடுகளின் போது, ​​இந்தியாவுடன் இணைந்து செயற்படுகின்றோம். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடியுள்ளேன். அதேபோல், நாளைய தினம் இந்திய வெளிவிவகார அமைச்சருடனும் கலந்தாலோசிக்கவுள்ளோம்.

நாட்டில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கும், பசுமை ஹைட்ரஜனைப் பெறுவதற்கும் இந்தியா ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். வடக்கு கடல் பரப்பைக் கொண்டு அந்த நன்மையை அடையவோம். அதன் முதல் படியாக அதானி இலங்கை வந்தார். இதுபோன்று புதிய பாதையில் நாம் பயணிக்க வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image