Home » நீங்கள் 18% வற் வரி செலுத்தினாலும் நாட்டின் அபிவிருத்திக்கு உதவியாக அமையும்

நீங்கள் 18% வற் வரி செலுத்தினாலும் நாட்டின் அபிவிருத்திக்கு உதவியாக அமையும்

Source

டீசல் மற்றும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் வாயிலாக இலஞ்சம் பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தாலும், சூரிய மற்றும் காற்றாலை வேலைத்திட்டங்களின் ஊடாக இலஞ்சம் பெற முடியாது என்பதாலேயே அவ்வாறான திட்டங்களுக்கு சில குழுக்களால் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் .

பூநகரி குளத்திலிருந்து கிளிநொச்சி உப பிரிவு வரையில் தேவையாக பரிமாற்ற இணைப்பு கட்டமைப்புக்களை நிர்மாணித்தல் உள்ளடங்களான 700 மெகாவோட் சூரிய சக்தி நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கு மின்சார சபையின் பொறியியலாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், நாடு இந்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதற்கு மேற்படி பிரச்சினைகளே காரணமாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று (12) நடைபெற்ற தொழில்நுட்ப அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுக்களின் வரவு செலவு மீதான விவாதத்தின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ;

அமைச்சினால் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் அறிக்கையில் Pickme, Uber, Daraz போன்ற சேவை வழங்குநர்கள் தொழில்நுட்ப துறைக்குள் உள்வாங்கப்படுவதில்லை என்பதால் அவர்கள் வருமான வரி மற்றும் வற் வரியிலிருந்து விடுவிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 18% வற் வரி விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மேற்படி அனைத்து துறைகளிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளன.

தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குநர்களுக்கு இலங்கைக்கு வெளியிலிருந்து வெளிநாடுகளிலிருந்து செலுத்தப்படும் பணம், வரியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கல் 2019 டிசம்பர் 31 ஆம் திகதி வரையில் வற் வரிக்கு உட்பட்டதாக காணப்பட்டதோடு, 2020 ஜனவரி 1 ஆம் திகதி முதல் வற் வரியிலிருந்து விடுவிக்கப்பட்டது. புதிய திருத்தத்தின் படி 2024 ஜனவரி 1 முதல் தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குநர்கள் வரி செலுத்த வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப துறைகள் ஏற்றுமதியை இலக்காக கொண்டிருக்க வேண்டும் என்பதோடு, அதன் சேவை ஏற்றுமதி பூச்சிய பெறுமதியில் காணப்படுவதால் தொழில்நுட்ப சேவை தொழிற்துறைக்கு சுமையின்றி செயற்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை. இந்தியாவும் தகவல் தொழில்நுட்ப மென்பொருள் சேவைகளுக்கு, பொருட்கள் மற்றும் சேவை வரியான GST 18% அறவிடப்படுகிறது.

கொள்கை அடிப்படையில் 18% வற் வரியை விதிக்க தீர்மானித்துள்ளோம். அனைத்து துறைகளும் அதற்குள் உள்வாங்கப்பட வேண்டும். தொழில்நுட்பத் துறையிலிருக்கும் பலரும் அவர்கள் முன்னேறிச் செல்வதற்காக உதவிகளை கோருகின்றனர். சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் தொடர்ந்தும் அதனையே செய்கிறார்கள்.

எமக்கு பெருமளவான மனித வள பற்றாக்குறை உள்ளது. அதனால் எந்தவொரு நிறுவனத்திற்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் அவசியம் எனில் அதற்கு நாம் அனுமதியளிப்போம். மேலும் பலருக்கு பயிற்சிகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். அதனால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. அனுபவம் கொண்ட குழுவினர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். அதனால் நிறுனவங்களுக்கு வெளிநாட்டு பணிக்குழு அவசியம் எனில் அவர்களுக்கு நாம் வாய்ப்பளிப்போம்.

நாம் செயற்கை நுண்ணறிவு தொடர்பாக ஆய்வுகளுக்காக மாத்திரம் ஒன்றரை பில்லியன்களை ஒதுக்கியுள்ளோம். மேலதிக தொழில்நுட்ப ஆய்வுகளுக்காக 8 பில்லியனகளை ஒதுக்கியுள்ளோம். இந்த ஒதுக்கீடுகளை பயன்படுத்தி அந்த துறைகளில் பயனைடைய எதிர்பார்க்கிறோம்.

நாம் மிக விரைவாக டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி பயணிக்க இருக்கிறோம். அதேபோல் அடுத்த இரண்டு – மூன்று வருடங்களுக்குல் இலக்குகளை அடைய எதிர்பார்க்கிறோம்.

நீங்கள் 18% வற் வரியை செலுத்த நேரிட்டாலும் நாட்டின் அபிவிருத்திக்கு உதவியாக அமையும். செயற்கை நுண்ணறிவுடன் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால நாம் குறைந்த வருமானம் மற்றும் குறைந்த சம்பளத்துக்கான உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான மியன்மாருடன் போட்டியிட வேண்டிய நிலைமை ஏற்படும். கொள்கை அடிப்படையிலான டிஜிட்டல் மாற்றத்துக்கான நிறுவனம் ஒன்றை புதிதாக நிறுவ எதிர்பார்க்கிறோம். அவர்கள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் வேலைத்திட்ட முகாமைத்துவத்துடன் தொடர்புபடப்போவதில்லை. 10 வருடங்களுக்கு முன்பாக இதனை செய்திருக்க வேண்டும்.

அதேபோல் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க சபையை உருவாக்க நாம் திட்டமிட்டுள்ளோம். அதனால் தொழில்நுட்பத் துறையில் வணிகமயமாக்கல் தொடர்பில் தேடி அறியலாம். இவ்வாறான பணிகளுக்காக வரலாற்றில் அதிகளவான நிதி இம்முறையே ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தொடர்பிலும் நாங்கள் விசேட கவனம் செலுத்தி வருகிறோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு இலங்கையில் அதிக சாத்தியங்கள் உள்ளது.

காற்றின் ஊடாக மாத்திரம் 30 முதல் 40 கிகாவோர்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. சூரிய சக்தியின் ஊடாக 200 கிலோவாட்ஸ் உற்பத்தி செய்ய முடியும் என்று அமைச்சு மதிப்பீடு செய்துள்ளது. இந்த எரிசக்தியை இந்தியாவுக்கு விற்க முடியும். அதன் போது நாம் பச்சை ஹைட்ரஜன் மற்றும் பச்சை அமோனியா மீது கவனம் செலுத்த வேண்டும்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை பார்க்கும் போது தற்போதுள்ள பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக அவர்களுக்காக மேலும் பல்கலைக்கழகம் அவசியமாகிறது. அரச மற்றும் தனியார் துறையின் உதவியுடன் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்படும். அதன்படி, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட இரண்டு பல்கலைக்கழகங்கள் குருணாகல் மற்றும் சீதாவக்கவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

வெளிநாட்டு உதவியுடன் மற்றொரு பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பது குறித்து ஆராயப்படுகிறது. இவ்வாறு மேலும் மூன்று நான்கு புதியபல்கலைக்கழகங்களைத் ஆரம்பிக்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

அரச சார்பற்ற பல்கலைக்கழங்களை ஆரம்பிக்கவும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் அவற்றின் பிரிவுகளை ஆரம்பிக்கவும் வாய்ப்பளிக்கப்படும். விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்துறையில் மாற்றத்தை கொண்டுவரத் தேவையான அடித்தளம் இடப்படுகிறது.

உற்பத்தியை அதிகரிக்க புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரச மற்றும் தனியார் துறை பங்களிப்புடன் இது முன்னெடுக்கப்படும்.

முதலீடு குறித்த சட்டங்களைக் கொண்டுவருவதற்கும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்குள், இலங்கையின் முதலீட்டு சபை மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு சபை என்பன நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக பொருளாதார ஆணைக்குழு உருவாக்கப்படும். அனைத்து துறைகளிலும் முதலீட்டை ஈர்ப்பதே இதன் நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image