Home » அதிகாரப் பகிர்வுடன் தீர்வைக் காண்பதேசம்பந்தனுக்கு நாம் செய்யும் நன்றிக் கடன் – ஜனாதிபதி ரணில்

அதிகாரப் பகிர்வுடன் தீர்வைக் காண்பதேசம்பந்தனுக்கு நாம் செய்யும் நன்றிக் கடன் – ஜனாதிபதி ரணில்

Source

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் எப்போதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்காகப் பங்காற்றினார் என்றும், அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டிய விதம் தொடர்பில் அவருக்குத் தனியான நிலைப்பாடு இருந்தது என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அதற்காகச் சம்பந்தன் பல பணிகளைச் செய்துள்ளார் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இரா.சம்பந்தனுக்கு நாம் செய்யக்கூடிய சிறந்த காரியம் அவரின் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பதே என்றும் குறிப்பிட்டார்.

இரா.சம்பந்தன் எம்.பியின் மறைவு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தி இரங்கலைத் தெரிவித்தபோதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,

“நான் இந்த உரையாற்றும்போது, அன்று என்னுடன் நாடாளுமன்றத்துக்கு வந்தவர்களில் எஞ்சியிருந்த எனது சகாக்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் இப்போது எங்களுடன் இல்லை.

மிகவும் கடினமான காலகட்டங்களில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் ஆற்றிய பங்களிப்பை நன்றியுடன் நினைவு கூர்கின்றேன். அவர் தமிழ்த் தேசியப் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும், அவர் எப்போதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்காகப் பங்காற்றினார்.

ஒருமுறை அவர் என்னுடன் உரையாற்றும்போது “ரணில், நான் நாட்டைப் பிரிப்பேன் என்று நினைக்கிறீர்களா? நான் சிறுவனாக இருந்த போது, 1948இல் நாடு சுதந்திரம் பெறுவதைப் பார்க்கச் சென்றிருந்தேன்” என்று அவர் என்னிடம் குறிப்பிட்டார். அதனைக் காணும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை. நம்மில் பலர் அப்போது பிறக்கவே இல்லை.

ஆனால், அதிகாரப் பகிர்வு தொடர்பில் அவர் தனித்துவமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். அதைப் பற்றி விவாதம் செய்ய அவசியமில்லை. அவர் அதற்கான போதுமான பங்கைச் செய்துள்ளார் என்று நினைக்கின்றேன். அதனை நிறைவு செய்ய இன்னும் கொஞ்சம் பங்காற்ற வேண்டியுள்ளது. மேலும் அந்த வேலைகளை நிறைவு செய்வதே அவருக்கு செய்யக்கூடிய மிக உயர்ந்த பங்களிப்பாக இருக்கும்.” – என்றார்.

இதையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றும்போது,

“சம்பந்தன் தொடர்பில் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் உணர்வுபூர்வமாக இங்கு தெரிவித்த கருத்துக்களுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தானும் சம்பந்தனும் 1977 இல் ஒன்றாக நாடாளுமன்றுக்குள் நுழைந்தார்கள் என்று ஜனாதிபதி கூறியமையை நாங்கள் செவிமடுத்தோம். சம்பந்தனின் ஆயுள் காலத்தில் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி திரும்பத் திரும்பக் கூறி வந்தார். துரதிஷ்டவசமாக சம்பந்தன் எம்மைப் பிரிந்து விட்டார். எனவே, ஜனாதிபதியின் இந்தப் பதவிக்காலம் இந்த ஒக்டோபரில் முடிவடைவதற்கு முன்னராவது இந்த விடயம் இந்த நாட்டில் வதியும் அனைத்து மக்களின் திருப்திக்கும் அமைவாகத் தீர்க்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடமும் அரசிடமும் கோரிக்கையாக விடுகின்றேன்.” – என்றார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image