உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பிரதிவாதிகளுக்கு உத்தரவு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட ஐந்து பேருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதிய தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்தும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க இவர்கள் தவறியுள்ளார்கள் என்று தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரித்ததன் பின்னர் உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்த்தன, தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மென்டிஸ் ஆகியோர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளார்கள். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பத்து கோடி ரூபாவை இழப்பீடாக செலுத்துவது அவசியமாகும்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்த்தன ஆகியோர் தலா ஏழு கோடி 50 இ.லட்சம் ரூபாவை இழப்பீடாக வழங்குவது அவசியமாகும். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு ஐந்து கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் ஒரு கோடி ரூபாவை அபராதமாக செலுத்துவது அவசியமாகும். இந்த இழப்பீட்டு தொகையை பிரதிவாதிகள் தமது சொந்த பணத்திலிருந்து செலுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்த்தனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.