காஸா சிறுவர் நிதியத்திற்கான நிதியை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை நிறைவு
காஸாவில் நிலவும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சிறுவர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட காஸா சிறுவர் நிதியத்திற்கான நிதித் திரட்டும் நடவடிக்கை நேற்று முடிவடைந்தது.
இந்த நிதியத்திற்கு தொடர்ந்தும் பணத்தை வைப்பிலிட வேண்டாம் என ஜனாதிபதி செயலகம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்தும் இந்த நிதியத்திற்கான பணம் வைப்பிலிடப்படுமாயின் அது சமூக நலன்புரி நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி நிதியத்திற்கு வழங்கப்படவிருக்கிறது.
முதற்கட்டமாக பலஸ்தீன அரசாங்கத்திற்கு இலங்கையில் திரட்டப்பட்ட பத்து லட்சம் அமெரிக்க டொலர்கள் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தன.
நேற்று வரை கிடைத்த நிதியத்திற்கான பணத்தை பலஸ்தீனுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இந்த நிதித் திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.