நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதுடன், தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் அரசியலமைப்பின் தொடர்புடைய ஏற்பாடுகளை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் இந்தியா இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி, நேற்று (05) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தபோது இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், திட்வா சூறாவளிக்குப் பின்னர் இலங்கையின் மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குதல், எரிசக்தி ஒத்துழைப்பு, வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பித்தல், திருகோணமலையை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்தல், காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயமாக்குதல் மற்றும் டிஜிட்டல் அடையாளத் திட்டம் உள்ளிட்ட இந்திய ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
2017 முதல் 2019 ஆம் ஆண்டுகளுக்கிடையில் ஒன்பது மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்திருந்தாலும், அதன் பின்னர் இதுவரை மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமல் தாமதமாகி வருகிறது.
இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்று (05) உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்தார்.
இந்த விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா ஆகியோருடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
The post மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த இந்தியா இலங்கைக்கு அழுத்தம்! appeared first on LNW Tamil.