மட்டக்களப்பில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியாக திரள வேண்டும் – கவனஈர்ப்பு
வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், வடக்கு, கிழக்கு மக்களின் நிரந்தரமான அரசியல் தீர்வுக்காக வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியாக திரள வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து மட்டக்களப்பில் கவனஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில், இப்போராட்டம் நுற்றுக்கணக்கானோரின் பங்குபற்றலுடன் நடைபெற்றது. இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ள இப் இப் போராட்டம், எதிர்வரும் பத்தாம் திகதி வரை தொடர் போராட்டமாக இடம் பெறஉள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இது போன்ற போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப் போராட்டத்தின் போது அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அறிவிக்கும் வகையில், கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை ஒன்றும் வாசிக்கப்பட்டது.
அவ் அறிக்கையில்,
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வலியுறுத்துவதற்கு அனைத்து தழிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள்க.
வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்த பேச்சு வார்த்தைகள் சிறுபான்மை தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை சனாதிபதிக்கும் இடையே நடைபெறவுள்ளதாக அறிகின்றோம். – அதனை நாங்கள் பெரிதும் வரவேற்கின்றோம்.
எனினும், தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் கோரிக்கைகளையும், அரசியல் தேவைகளையும் உள்ளடக்கிய வகையில் இப்பேச்சு வார்த்தைகள் அமைய வேண்டுமாயின் இப்பேச்சு வார்த்தைகள் வெளிப்படை தன்மை உடையதாக நடைபெற வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றோம்.
ஆனால் தற்போதைய நிலையில் தமிழ் அரசியல் கட்சிகளிடையே அரசியல் தீர்விற்கான நடவடிக்கைகள் ஒருமித்த முறையில் முன்னெடுக்கப் படவில்லை என்பதனை நாம் வருத்தத்துடன் தெரிவிக்கின்றோம்.
மேலும், நடைபெறவுள்ள அரசியல் தீர்வு தொடர்பான இப் பேச்சு வார்த்தைகளில் தனியொரு கட்சியைச் சார்ந்த ஒரு சில பிரதிநிதிகள் மாத்திரம் கலந்து கொள்ளவுள்ளதாக ஊடகங்கள் ஊடான தகவல்கள் வெளிவருகின்றமையை நாம் பார்க்கின்றோம்.
மேலும், அக்குறிப்பிட்ட அரசியில் கட்சியின் தலைமைத்துவங்களிடேயும் பரஸ்பரம் வெளிப்படைத்தன்மையுடைய கலந்துரையாடல்களோ, ஒருமித்த முன்னெடுப்புக்களோ காணப்படாததை நாங்கள் இங்கு சுட்டிக் காட்டுகின்றோம். -இது இத்தரப்பினர்களை தேர்தல் மூலம் தெரிவு செய்த மக்கள் மத்தியில் காணப்படும் விமர்சனமாக உள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் தமிழ் மக்களின் நிலையான அரசியல் தீர்விற்கு பங்கம் விளைவிக்கும் ஜனநாயகமற்ற போக்காக காணப்படுவதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எனவே அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு ஒரே குரலில் ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வலியுறுத்த வேண்டும்.
இதுவே தமிழ் மக்கள் தமது ஜனநாயக வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்த தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் கடமையாகும்.
அந்த வகையில் கீழ் குறிப்பிடப்படும் முக்கிய விடயங்களிலும், ஏனைய விடயங்களிலும் கவனம் செலுத்துமாறு வேண்டுகின்றோம்.
AR