மஹா சிவராத்திரி தினம் இன்றாகும். இந்துக்கள் சிவனருள் வேண்டி இன்றைய இரவு முழுவதும் விழித்திருந்து பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். சிவராத்திரி பற்றிய பல ஐதீகங்கள் உண்டு. உலகப் பிரளயத்தில் உயிர்கள் எல்லாம் சிவனிடத்தில் ஒடுங்கியதாகவும், மீண்டும் அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு அம்பிகை இடைவிடாமல் சிவனை வழிபட்டதாகவும் இந்துக்கள் நம்புகிறார்கள்.
அவ்வாறு வழிபட்ட தினம் சிவராத்திரி எனப் பெயர் பெற வேண்டும் எனவும், சிவராத்திரி தினத்தில் சிவபெருமானை வழிபட்டு சகல நலன்களுடன் முக்தி நிலை அடைய வேணடும் என அம்பிகை கேட்டுக் கொண்டதாகவும் அடியார்கள் கருதுகிறார்கள்.
இந்த அடிப்படையில், சிவபூமி என்று போற்றப்படும் இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்கள் அடங்கலாக இன்று ஆலயங்களில் நான்கு சாமப் பூஜைகள் இடம்பெறும்
இதேவேளை, இந்து கலாசாரத் திணைக்களத்தின் அனுசரணையுடன் புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் களுத்துறை ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் மகா சிவராத்திரி பெருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ சிவம் ஸ்ரீ சுதர்ஷனன் குருக்கள் தலைiமையில் கிரியாகால பூஜைகள் இடம்பெறும். நாடளாவிய ரீதியிலும் ஆலயங்களில் விசேட சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.