எல் நினோ தாக்கம் காரணமாக நாட்டின் 7 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (24) வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அம்பாறை, பதுளை, மட்டக்களப்பு, மொனராகலை, பொலன்னறுவை, இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய 7 மாவட்டங்களே பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த 7 மாவட்டங்களிலும் உள்ள 23 பிரதேச செயலகப் பிரிவுகள் வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக 25,628 குடும்பங்களைச் சேர்ந்த 81,865 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 20 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு குடிநீர் விநியோகிக்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதிகளவில் குடிநீர் விநியோகிக்கப்பட்ட மாவட்டமாக மொனராகலை காணப்படுகிறது. அங்கு 7 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 10,264 குடும்பங்களின் 33,023 பேருக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 9,547 குடும்பங்களின் 28,523 பேருக்கு குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அம்பாறை மாவட்டத்தில் 2 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 2,537 குடும்பங்களின் 7,882 பேருக்கு குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post எல் நினோ தாக்கம்: இலங்கையின் 7 மாவட்டங்களில் 81,865 பேர் பாதிப்பு appeared first on LNW Tamil.