இலங்கை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரிச் சீர்திருத்தங்களின் பின்னணியில், கொழும்பு துறைமுக நகரில் இதுவரை 2.1 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்த முதலீட்டு மதிப்பை 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரிப்பது அரசாங்கத்தின் இலக்காக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் கீழ் குடியிருப்பு வளாகங்கள், ஹோட்டல்கள் மற்றும் மாநாட்டு மையங்கள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்கள் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தரங்களுக்கு ஏற்ப 15 முதல் 23 ஆண்டுகள் வரையிலான புதிய வரிச் சலுகைகளை வழங்குவதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், முதலீட்டு சபையின் ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு அப்பால், இந்த முதலீடுகள் நேரடியாக துறைமுக நகருக்குள் வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வரிச் சலுகைகளுக்கு மேலதிகமாக, நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் கட்டியெழுப்புவதன் மூலம் உலகின் முன்னணி முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முதலீட்டுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதே இந்த முழுமையான வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கொழும்பு துறைமுக நகரில் 2.1 பில்லியன் டொலர் முதலீடுகள் உறுதி appeared first on LNW Tamil.