இலங்கையின் இடதுசாரி அரசியலின் தந்தை என்றழைக்கப்படும் பிலிப் குணவர்த்தனவின் 122 ஆவது ஜனன தினம்
இலங்கையின் இடதுசாரி அரசியலின் தந்தை என்றழைக்கப்படும் பிலிப் குணவர்த்தனவின் 122 ஆவது ஜனன தினம் இன்றாகும். இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியின் முதலாவது தலைவராக பிலிப் குணவர்த்தன கருதப்படுகின்றார். 1936ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் அமைப்பின் கீழ் இடம்பெற்ற தேர்தலில் அவிசாவளை தொகுதியில் இருந்து அரச பேரவைக்குத் தெரிவுசெய்யப்பட்டார். 1947ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் அவிசாவளைத் தொகுதியில் இருந்து அவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். லங்கா சமசமாஜக் கட்சியின் இருந்துபின்னர் வெளியேறிய அவர், புரட்சிகர சமசமாஜக் கட்சி என்ற அரசியல் அணியை உருவாக்கினார். 1956ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற அவர், எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தில் விவசாய அமைச்சராக நியமிக்கப்பட்டார். இலங்கையின் விவசாயத் துறை வரலாற்றில் புரட்சிகர மாற்றங்களை மேற்கொண்ட அரசியல் வாதியாகவும் இவர் கருதப்படுகின்றது. 1965ஆம் ஆண்டு டட்லி சேனாநாயக்க அரசாங்கத்தில் கைத்தொழில் மற்றும் கடற்றொழில் அமைச்சராகவும் அவர் பணியாற்றினார். பிலிப் குணவர்த்தன பொரலுகொட சிங்கம் என்றும் இலங்கை அரசியல் வரலாற்றில் அழைக்கப்படுகின்றார். அமரர் பிலிப் குணவர்த்தனவின் 122 ஆவது ஜனன தினத்திற்கு அமைவாக இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகளில் அவரது மகனும் பிரதமருமான தினேஷ் குணவர்த்தன அதிதியாகக் கலந்துகொள்வார்.