Home » நாடு வீழ்ச்சிப் பாதையில் – உண்மைகளை வெளியிடும் சஜித்!

நாடு வீழ்ச்சிப் பாதையில் – உண்மைகளை வெளியிடும் சஜித்!

Source

நாடு கடுமையான பொருளாதார அபாய நிலையை எதிர்கொண்டு வருவதாகவும், அந்த அபாயம் குறித்து மக்களுக்கு உண்மையை தெரிவிக்காமல் போலியான புள்ளிவிவரங்களின் மூலம் அரசாங்கம் மக்களை தவறாக வழிநடத்தி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பால் மா மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரிப்பதற்குக் காரணம் நாட்டின் பொருளாதார அபாய நிலைதான் என்றும், இதுகுறித்து மக்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச பொருளாதாரக் கொள்கைகளின்படி, ஒரு நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பு குறைந்தது மூன்று மாத இறக்குமதிகளுக்குத் தேவையான அளவில் இருக்க வேண்டும் என்றும், ஜனாதிபதி நாட்டில் 7 பில்லியன் அமெரிக்க டொலர் கையிருப்பு இருப்பதாகக் கூறினாலும், மாதத்திற்கு சுமார் 2 பில்லியன் டொலர் செலவாகின்றதால் மூன்று மாதங்களுக்கு குறைந்தது 6 பில்லியன் டொலர் தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ரூபாய் மதிப்பு சரிவும், எரிபொருள் விலை உயர்வும் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் பாதிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சமூக ஊடக செயற்பாட்டாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் உரையாற்றிய அவர், தற்போது காணப்படும் 7 பில்லியன் டொலர் கையிருப்பில் 1.2 பில்லியன் சீன யுவான் இருப்பதாகவும், அதனை நடைமுறையில் பயன்படுத்த முடியாததால் உண்மையில் பயன்படுத்தக்கூடிய தொகை 5.8 பில்லியன் டொலரே என்றும் குறிப்பிட்டார்.

2022ஆம் ஆண்டு 95 ஒக்டேன் பெட்ரோல் விலை 470 ரூபாவாக உயர்ந்திருந்த நிலையில், தற்போது அது 410 ரூபாவாக உள்ளதாகவும், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை மேலும் அதிகரித்தால் நாடு மீண்டும் திவாலாகும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.

அண்மைக்காலங்களில் வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் அதிகரித்திருந்தாலும், மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக வேலைவாய்ப்புகள் குறைந்து, அந்த வருவாயும் பாதிக்கப்படக்கூடும் என்றும் அவர் கூறினார்.

மேலும், 2027 மார்ச் மாதத்தில் IMF ஒப்பந்தம் முடிவடையும் போது, சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு குறையும் என்றும், அதற்குப் பின்னர் எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் வெளிநாட்டு வருவாய் குறைவு ஏற்பட்டால் நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டி வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

2028ஆம் ஆண்டிலிருந்து வெளிநாட்டு கடன் திருப்பிச் செலுத்தும் தொகை 1.5 பில்லியனிலிருந்து 3.5 பில்லியன் டொலர் வரை அதிகரிக்கும் என்றும், அதனால் நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

IMF பரிந்துரையின்படி இலங்கையின் கையிருப்பு 13.4 முதல் 14 பில்லியன் டொலர் வரை இருக்க வேண்டும் என்றும், தற்போது அதன் 50 சதவீத அளவுதான் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த இலக்கை அடைய மாதத்திற்கு குறைந்தது 600 மில்லியன் டொலர் சேமிக்கப்பட வேண்டும் என்றும், தற்போது மாதாந்திர கையிருப்பு அதிகரிப்பு வெறும் 60 மில்லியன் டொலர் மட்டுமே எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே தற்போதைய சூழ்நிலையிலேயே அடுத்த கட்ட IMF ஒப்பந்தத்திற்குச் செல்ல வேண்டும் என்றும், அதன்மூலம் குறைந்த அழுத்தம் மற்றும் குறைந்த நிபந்தனைகளுடன் பொருளாதாரத்தை நிலைநிறுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

துறைமுகத்தில் இறக்குமதி விலைக்கே எரிபொருள் வழங்கப்படும் என்று கூறப்பட்டாலும் அது நடைமுறையில் இல்லை என்றும், மின்சார கட்டணம் 33 சதவீதம் குறைக்கப்படும் என்று கூறப்பட்ட வாக்குறுதியும் நிறைவேறவில்லை என்றும், விவசாயிகளுக்கு தரமான உரம் கிடைக்காததால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

The post நாடு வீழ்ச்சிப் பாதையில் – உண்மைகளை வெளியிடும் சஜித்! appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both