முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடைநிறுத்தப்பட்ட ஜப்பானிய அரசாங்கத்தின் ஆதரவுடன் கொழும்பில் ஆரம்பிக்கப்படவிருந்த இலகு ரயில் போக்குவரத் திட்டத்தை (LRT) மீண்டும் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.
கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்வதற்கு முன்னர், சர்வதேச சமூகத்துடனான இலங்கையின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கும் முயற்சியில் இலக்கு ரயில் திட்டத்தை மீள ஆரம்பிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், முதலீட்டுத் திட்டம் அல்லது வெளிநாட்டு உதவிக்காக இலங்கை வேறொரு நாட்டுடன் கைச்சாத்திடும் எந்தவொரு ஒப்பந்தமும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் மற்றும் அத்தகைய ஒப்பந்தங்களை முடிவுக்கு கொண்டுவருவது பாராளுமன்றத்தின் ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கும் முன்மொழிவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
N.S