பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்கு, தெஹிவளை–கல்கிசை முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் (CCIB) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (01) காலை 9.00 மணிக்கு குறித்த பணியகத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு போதைப்பொருட்களை இறக்குமதி செய்யும் முக்கிய ஐந்து பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராகக் கருதப்படும் ஷிரான் பாசிக், துபாயில் வைத்து அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் அவர் கடந்த ஆகஸ்ட் 14ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
அவரை தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்தபோது வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில், தனசிறி அமரதுங்கவிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை அழைத்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் (CCIB) பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு தலைமையிலான மேற்பார்வையின் கீழ் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் இலங்கை பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி தெஹிவளை–கல்கிசை மாநகர மேயராக தனசிறி அமரதுங்க பணியாற்றியுள்ளார்.
மேலும், 2021ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியாகவும் அவர் பணியாற்றியிருந்தார்.
The post போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்கவிடம் விசாரணை appeared first on LNW Tamil.