இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தொடர்ந்தும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தத் தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதுடன், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் அறிவுறுத்தியுள்ளது.
இந்தத் தொகுதியின் தாக்கம் காரணமாக வரும் நாட்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்.
இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவ மற்றும் கடற்சார் சமூகத்திடமும் கோரப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
காற்று மேற்கு திசையிலிருந்து அல்லது ஒரு குறிப்பிட்ட திசையின்றியும் வீசக்கூடும் என்பதுடன், காற்றின் வேகம் மணிக்கு 25-35 கி.மீ வரை காணப்படும்.
காலி முதல் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
காலி முதல் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் ஓரளவிற்கு கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
The post மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் appeared first on LNW Tamil.