இங்கிலாந்து துணை பிரதமர் டேவிட் லாமி உத்தியோகபூர்வ விஜயமாக இன்று செவ்வாய்க்கிழமை (17) காலை இலங்கையை வந்தடைந்தார்.
அவருடன் அவரது அலுவலகத்தைச் சேர்ந்த 7 உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய தூதுக்குழுவும் நாட்டை வந்துள்ளது.
தோஹாவிலிருந்து கட்டார் எயார்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான QR-664 என்ற விமானம் மூலம் இன்று காலை 09.11 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் சென்றடைந்தனர்.
அவர்களை வரவேற்பதற்காக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன உள்ளிட்ட அரசாங்க உயர்மட்ட பிரதிநிதிகள் விமான நிலையத்தின் விசேட விருந்தினர் அறையில் காத்திருந்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விஜயத்தின் போது, துணைப் பிரதமர் டேவிட் லாமி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் முக்கிய இருதரப்புக் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
மேலும், ‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய இராச்சியம் வழங்கிய மனிதாபிமான உதவித் திட்டங்களை பார்வையிட்டு, அவற்றின் செயல்பாடுகளை மேற்பார்வை செய்வதும் இந்த விஜயத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
இதனுடன், சிறுவர் பராமரிப்புக்கான பூகோள சாசன ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதும் இந்த விஜயத்தின் போது இடம்பெறவுள்ளது.
The post இங்கிலாந்து துணை பிரதமர் இலங்கையில் appeared first on LNW Tamil.