ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கைகள் காரணமாக, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளமை உலகப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நெருக்கடி நிலைமையால் பொருட்களின் விலை அதிகரிப்பினால் உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக பிபிசி வெரிஃபை (BBC Verify) ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
வழமையாக நாளொன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணிக்கும் ஹோர்முஸ் நீரிணை வழியிலான போக்குவரத்து, தற்போது ஒரு சில கப்பல்களாகக் குறைந்துள்ளதாக பிபிசி வெரிஃபை சுட்டிக்காட்டுகிறது.
இதன் விளைவாக, எரிபொருள் மற்றும் எரிவாயு விலை அதிகரிப்புடன், ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள், மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் வேகமாக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய விவசாயத் தேவைகளுக்கான யூரியா, பொட்டாஷியம், அமோனியா மற்றும் பொஸ்பரேட் போன்ற உரத் தேவைகளில் மூன்றில் ஒரு பங்கு (1/3) பொதுவாக இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.
வட அரைக்கோளத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் முக்கிய பயிர்ச்செய்கை காலங்களாக இருப்பதால், தற்போதைய உரத் தட்டுப்பாடு ஆண்டின் பிற்பகுதியில் பயிர் விளைச்சல் குறைவதற்கு நேரடியாக வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், ஜெர்மனியின் கீல் ஆராய்ச்சி நிறுவனம்(Kiel Research Institute), ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டால், உலகளாவிய கோதுமை விலை 4.2% ஆகவும், பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் 5.2% ஆகவும் உயரக்கூடும் எனக் குறிப்பிடுகிறது.
கீல் நிறுவனத்தின் தரவுகளின்படி, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் பொருட்களின் விலை அதிகம் உயரக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.
உணவுப் பொருட்களின் ஒட்டுமொத்த விலை அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளாக ஜாம்பியா (30.7%), இலங்கை (15.3%), தாய்வான் (12.5%) மற்றும் பாகிஸ்தான் (11.4%) ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன.
The post ஹோர்முஸ் நீரிணை தடையால் இலங்கைக்கும் பாதிப்பு appeared first on LNW Tamil.