இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும், இலங்கை தமது நிலப்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்காது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
குறித்த சந்திப்பின் போதே, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிக்கை வௌியிட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையிலான வரலாற்று ரீதியான உறவுகளை மேலும் வளர்த்துக்கொள்ளத் தலைவர்கள் இதன்போது உடன்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ‘டித்வா’ சூறாவளி காலப்பகுதியில் ‘சாகர் பந்து’ நடவடிக்கையின் கீழ் இந்தியா வழங்கிய மனிதநேய மற்றும் புனர்வாழ்வு உதவிகளுக்காக ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அதற்குப் பதிலளித்த இந்திய பாதுகாப்பு அமைச்சர், மிக நெருங்கிய அண்டை நாடு மற்றும் நண்பன் என்ற ரீதியில் முதல் உதவி வழங்குநராகத் ஆதரவளிப்பதைத் தமது பொறுப்பாகக் கருதுவதாகவும், எதிர்காலத்திலும் அது தொடரும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் இந்திய பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இந்தியாவுக்கு ஜனாதிபதி அனுர அளித்த உறுதி appeared first on LNW Tamil.