Home » MUKAVARI 2022-05-26 15:59:45

MUKAVARI 2022-05-26 15:59:45

Source
வேலியே பயிரை மேய்கின்றது!            
---------------------------------------------- முகுந்தமுரளி 



2009இன் பின் ஈழத் தமிழர்கள் நாம் அரசியல் அநாதைகள் எனப்படும் நிர்க்கதி நிலையில் இருந்தாலும், தாயகத்தில் அரசியலில் சரியான தலைமை இல்லாத நிலையிலும் பெரும்பான்மையான மக்களும் சில தலைவர்களும் தமிழின விடுதலையை மூச்சாக வைத்துச் செயற்படுகின்ற ஓர்மம் நிறைந்தவர்களாகவே விளங்குகிறார்கள். அதேபோல் பூமிப் பந்தெங்கும் சிதறுண்டு வாழும் ஈழத் தமிழினத்தின் மத்தியில் விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் தமிழ் உணர்வாளர்களோ, பல அமைப்புக்களாக செயற்பட்டாலும் பிளவுற்ற நிலையிலேயே காணப்படுகின்றனர். இப்பிளவுகளுக்குப் பின்னால் உள்ளவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடியளவான தனிநபர்களே. 
தனிநபர்களின் அகந்தையினால் பல நல்ல செயல்கள் கூட செயற்படாமுடியாமல் தடைப்பட்டுக்கொண்டே செல்கின்றது. இவற்றை விமர்சித்து எழுத முற்பட்டாலோ அல்லது அணுகி இந்த ஆபத்தை எடுத்தியம்ப முற்பட்டாலோ குழப்பவாதிகள்; என முத்திரை குத்தி உண்மையை ஏற்க மறுப்பதையே தம் செயலாக சிலர் கொண்டுள்ளனர். தம் செயல்களைத் சீர்திருத்துவதற்குப் பதில் தங்கள் ஆசனங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயல்கின்ற இத்தகையவர்களால் ஒருபொழுதும் தமிழ்த் தேசியம் வலுவடையப் போவதில்லை. அதேபோல் இத்தகைய உண்மைகள் தெரிந்திருந்தும் கண்டும் காணமல் பூசி மெழுகி எழுதுபவர்களின் எழுத்துக்களும் தமிழினத்தை பலவீனமே படுத்தும். உண்மையை எழுதி அதனைப் பகிரங்கப்படுத்துவது ஈழத் தமிழ் தேசியத்தின் மேம்பாட்டுக்காகவேயன்றி மழுங்கடிப்பதற்காக அல்ல. 
தமிழீழ விடுதலைப்பணியில் மிகப்பிரபலமாக விளங்கும் ஒரு அமைப்பின் மேலவை உறுப்பினரான தமிழ் ஆசிரியர் ஒருவர், கனடாவில் பாலியல் குற்றச்சாட்டுகளிற்கு உட்பட்டதன் காரணமாக 2009 இற்கு முதல் சமாதான காலப் பகுதியில் வன்னிக்கு அழைக்கப்பட்டு கணக்கு வழக்குகள் எல்லாம் பெறப்பட்டு தேசியப் பணியில் இருந்து முற்றாக விலக்கப்பட்டவராவார். முதலில்;; காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் பணிபுரிந்த இவர்,  சிறீலங்கா சுதந்திரக்கட்சி வினோதனின் நெருங்கிய சகா ஆவார். அக்கால கட்டத்தில் ஆசிரியப் பணி வேலை வாய்ப்புக்கு கையூட்டுப் பெற்றுக்கொண்டு செயற்பட்ட குற்றச்சாட்டும் இவர்மீது உள்ளது. பின்னர் நைஜீரியா சென்றுவிட்டார். 90 களில் அங்கிருந்து புலம் பெயர்ந்து இங்கு பூனைபோல வந்து புலிவேசம் இட்ட இவர் தமிழ்த் தொண்டை எழுத்தாற்றலை மதிக்கின்றவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். 
இவர் அண்மையில் யூ-ரியூப் காணொளி பேட்டி ஒன்றில் தான் மேலவை உறுப்பினராக இருக்கும் அமைப்பின் செயற்பாடுகள் பற்றி “ அதை உருவாக்கியவன் நான். ஆனால் அவர்கள் அதனைச் சரியாகக் கொண்டு செல்கிறார்களோ என்பது எனக்குத் தெரியாது. இதன் உருவாக்கத்திற்கு மலேசியாவில் குழுவாக பணியாற்றியவர்களில் முக்கிய புள்ளி நான். இது தமிழ்த்தேசியத்தை கட்டி எழுப்பும்; நோக்குடன்  உலகெங்கும் பரந்துவாழும் ஈழத் தமிழினத்தை  ஒருங்கிணைக்கும் ஒற்றைப் புள்ளியாகும். தமிழீழ விடுதலை இலட்சியத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் உறுப்பினர்கள் இன்றுவரை அதனை உணரவில்லை” என்று கூறிப்பிடுகின்றார். Part 04/Interview with S. Rajaratnam, President–Active Brain Center/Economic Crises in Sri Lanka. - YouTube
வேடிக்கை என்னவென்றால் இவரது கதையானது வேலியே பயிரை மேயும் கதையாகவே விளங்குகிறது. காரணம்; இவரே இன்றுவரை கனடாவில் அவ்வமைப்பின் பணிகளில் மேலவை (செனற்றர்) உறுப்பினராக இருந்து செயல்பட்டு வருகின்றார். இவரது நடவடிக்கைகளை உற்று நோக்குகையில் இவ்வமைப்பைக் கட்டியெழுப்பி தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்த்துவிட்டு 13 வருடங்கள் கடந்த நிலையில் செயற்படாமல் முடக்குவதற்காகவே ஒரு நிகழ்ச்சி நிரல் ஒன்றினுள் இவர் செயல்படுவதாகவே கருதவேண்டியுள்ளது. விடுதலைப் போராட்டம் என்பது ஒருபொழுதும் தனிநபர் குத்தகைக்கு எடுத்து நடத்தும் வியாபாரம் அல்ல. ஏனெனில் இவரது கருத்துக்கள் மற்றும் இவரது வழிகாட்டலில் செயற்படும் இன்னொருவரின் ஆணவச் செயற்பாடுகளும் சனநாயகவழி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களையே கட்டிப்போடும் அளவிற்கு அதிகாரம் மிக்கதாகவும், விமர்சனத்திற்கு உரியதாகவுமே விளங்குகிறது. இவர்கள் ‘நுண் மேலாண்மை’ எனும் தோல்வியுற்ற செயல்பாட்டு முறையை கடைப்பிடிப்பதன் மூலம் செயல்பட முன்வந்த தொண்டர்களையும் விரட்டியடித்து செயற்பாடுகளையும் முடக்கியுள்ளமையே அனுபவத்தில் கண்டவன் நான். கட்டையிலே போகிற வயதிலும் தமிழனத்தின் விடியல் பயணத்திற்கு முட்டுக்கட்டையாகவே இவர்களது செயல்கள் விளங்குகின்றன. 
13 வருட காலங்களின் பின் இந்த அரசியல் கருத்துருவாக்கத்தின் முக்கியபுள்ளியாகவும், இதனைத் “தானே உருவாக்கியதாக”வும் இவர் தம்பட்டம் அடித்தாலும், அத்தகைய ஆலோசனைக்குழுவில் இவரது பெயரைக் காணமுடியவில்லை.
யூன் 2009 இல், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான ஆலோசனைக் குழு ஒன்று “நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை நிறுவுவதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்கும், அத்தகைய நாடுகடந்த அரசாங்கத்தால் அடையப்பட வேண்டிய நோக்கங்களைப் பரிந்துரைப்பதற்கும்" நிறுவப்பட்டது.
ஆலோசனைக் குழுவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல நிபுணர்கள் இருந்தனர்.
1.முத்துக்குமாரசுவாமி சொர்ணராஜா Ph.D./LL.D. (லண்டன் பல்கலைக்கழகம், யுகே)
2.பிரான்சிஸ் பாயில், Ph.D./J.D.(ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்கா), சர்வதேச சட்டப் பேராசிரியர் அமெரிக்கா
3.பேராசிரியர் ராமசாமி பழனிசாமி, (மலேசியா)
4.பேராசிரியர் ஏ.ஜே.சி.சந்திரகாந்தன், (கனடா)
5.நடராஜா ஸ்ரீPஸ்கந்தராஜா, முனைவர் (சிட்னி பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா), சுற்றுச்சூழல் தொடர்பு பேராசிரியர், சுவீடிஷ் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம், ஸ்வீடன்
6.முருகர் குணசிங்கம், முனைவர்
7.டாக்டர் சிவனேந்திரன் சீவநாயகம் (Aus)
8.ஏ.எல்.வசந்தகுமார் முனைவர் (யுகே)
9.கரேன் பார்க்கர் Ph.னு. மனிதாபிமான வழக்கறிஞர் (அமெரிக்கா)
10.நாகலிங்கம் ஜெயலிங்கம், எம்.டி. (அமெரிக்கா)
11.செல்வ சிவராஜா
12.பால் வில்லியம்ஸ் பீட்டர் ஷால்க்,  Ph.D. லண்ட் பல்கலைக்கழகம் (மதம்) ஃ பல்கலைக்கழகம் கோதன்பர்க் (இந்தியாலஜி), மத வரலாற்றின் பேராசிரியர் உப்சாலா பல்கலைக்கழகம், ஸ்வீடன்
இந்த ஆலோசனைக் குழுவே தமது இறுதி அறிக்கையை மார்ச் 2010 இல் வெளியிட்டது.
இந்தத் தகவலை நீங்களும் விக்கிப்பிடியாவில் பார்க்கலாம். ஆயினும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கத்திற்கான நாடுவாரியான செயற்பாட்டுக்குழுவின் இருபத்தியொரு நபர்களில் இவரும் ஒருவர் என்பதை நாம் அறிவோம். 
இன்று உலகெங்கும் தமிழ்த் தேசியத்தை ஒருங்கிணைத்து கட்டியெழுப்பிய பெருமை எமது தமிழீழத் தேசியத் தலைவரையும், நமது மாவீரச் செல்வங்களையும் தான் சாரும்.  உண்மை இவ்வாறு  இருக்க இவர் ஓதுகின்ற வேதம்: “ அனைவரையும் ஒன்றிணைக்கும் தமிழ் தேசியத்தை உலகத் தமிழர்கள் முன்னெடுக்கவில்லை. நாங்கள் இன்னமும் குண்டாஞ்சாட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். தமிழீழத்தை பார்க்கத்தான் வேண்டும் அதற்கான முன்னெடுப்புகக்களைச் செய்யத்தான் வேண்டும். ஆன அதைத்தான் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்றால் இல்லை.” என்று சொல்வதன் மூலமும் தானே தமிழ்த் தேசியத்தை ஒருங்கிணைக்க முனைவராக காட்ட முனைவதும் அதேவேளை தமிழீழத்தின் விடுதலையை ஒரு பக்கம் ஒதுக்கும் மனோநிலையும் கேள்விக்குரியதே.  “நான் நாடுகடந்த தமிழீழ அரசை உருவாக்கியவன் என்று மார்தட்டும் இவரே அதை உருவாக்கியவன் நான். ஆனால் அவர்கள் அதனைச் சரியாகக் கொண்டு செல்கிறார்களோ என்பது எனக்குத் தெரியாது.” என்று அந்த அமைப்பையே மக்கள் மத்தியில் கேள்விக்குரியதாக்குவதன் உள்நோக்கம் என்ன? அதுவும் பெரும்பாலான மக்களால் நம்பிக்கையோடு உற்றுநோக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையிலேயே இந்தத் தமிழ் ஆசிரியர் மக்களுக்கு மத்தியில் நாடுகடந்த தமிழீழ அரசின் மீது அதன் மேலவை உறுப்பினராக இருந்து கொண்டு சேற்றை வாரி இறைக்கின்றார். இது நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் மீதும் அவர் தலைமையிலான அமைச்சரவையின் மீதும் நம்பிக்கை அற்ற பேச்சாக அமைகிறது. உண்மையில்; பிரதமர் உருத்திர குமார் அவர்களின் மனிதாபிமானம் மிகுந்த அணுகுமுறையும் இத்தகையவர்களையும் அரவணைத்து செயல்படும் பரந்தமானப் பான்மையினாலும் ஏற்படும் பின்விளைவாகவே நான் இதைக் கருதுகிறேன். 
எண்பதுகளில் விடுதலைப் போரட்டத்தை மக்கள் மயப்படுத்திய பலசெயற்பாடுகளை தாயகத்தில் களத்தில் செயற்படுத்திய பல மூத்தபோராளிகளுடன் பயணித்தவர்களுக்கு இவர்களது அதிகார ஆணவ அலட்சியப் போக்கு எவ்வாறு இந்த  நாடுகடந்த தமிழீழம் எனும் அரசியல் கருத்துருவாக்கத்தில் செயற்படும் பலமான அமைப்பை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துகிறது என்பதனை அனுபவத்தில் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இவ்வாறாக தமிழினத்தின் விடியலுக்கு எழுச்சியையும், மறுமலர்ச்சியையும் கொண்டுவரக் கூடிய அமைப்பானது இத்தகையவர்களின் தலையீடுகளால்தான் மக்கள் மயப்படுத்தப் படாமல், தமிழ்த் தேசியம் என்கின்ற மையப்புள்ளியில் அனைத்து தமிழர்களையும் ஒருங்கிணைக்க முடியாத கையறுநிலையில் உள்ளது என நான் கருதுகிறேன். இதனை சரியான முறையில் உணரவேண்டியவர்கள் உணர்ந்தால் மட்டுமே இலட்சியப் பயணம் வெற்றிப் பாதையில் நகரும். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மக்கள் மயப்படுத்தப்பட்டால் மட்டுமே எதையும் சாதிக்கமுடியும். மக்கள் பலமே வலுவுள்ள பேரம் பேசும் பலத்தை உருவாக்கும். இந்திய வல்லரசு தேசியத் தலைவரின்; கொள்கையையும், தமிழீழத் தேசியக் கொடியையும் உறுதியாகப் பற்றியுள்ள இவ்வமைப்பினை விடுதலைப் புலிகளின்  நீட்சியாகவே பார்க்கின்றது. 


தமிழர்களின் மிகப் பெரிய பலம் தேசியத் தலைவரும், அவரது கொள்கைளும்  அதன் கொள்கை வழி மாவீரச் செல்வங்கள் செய்த உயிர் ஈகங்களுமாகும். ஓடாத மானும் போராடாத இனமும் மீண்டதாகச் சரித்திரம் இல்லை. எதிரிகளைவிட எமக்குள் இருந்து எம்மை அழிப்பவர்களே ஆபத்தானவர்கள். குனியக் குனியக் குட்டுறவன் மூடன் என்றால், குட்டக் குட்டக் குனியுறவனும் மூடன். விழிப்புத்தான் விடுதலைக்கு முதல்படி. அச்சமின்றி உண்மைகளை எழுதவேண்டிய காலத்தின் கட்டாயம் இதுவாகும். இதனால் எத்தகைய இடர்வரினும் எம் எழுத்துப்பணி தொடரும் 
(பிற்குறிப்பு : ஈழமுரசு பத்திரிகைக்காக எழுதப்பட்டது. 2020 செப்ரம்பர் முதல் வாராவாரம் தொடர்ந்து தமிழ்த் தேசியம் சார்ந்த எனது கட்டுரைகள் பிரசுரமாகி வந்தன. முதல்முறையாக இவ்வாரம் இக்கட்டுரை பிரசுரிக்க முடியவில்லை எனத் தகவல் வந்துள்ளது. எனது வலைத்தளத்திலே இக்கட்டுரையை வெளியிட்டுள்ளேன். முகத்திற்கு அஞ்சி  ஒருபொழுதும் இலட்சியத்தைக் கைவிடமுடியாது. தவறுகள் திருத்தப்பட வேண்டியவையே அன்றி மூடிமறைக்கப்பட வேண்டியவை அல்ல. மரணம் வரை ஈழத் தமிழ்த் தேசியத்தின் மேம்பாட்டை நோக்கியே ஊடக சுதந்திரத்துடன்  எனது எழுத்துப்பணி தொடரும்.)
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image