கிளிநொச்சி மாவட்டத்தின் சில பகுதிகளில் உள்ள கால்நடைகள் சிலவற்றிற்கு பெரியம்மை நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பூனகரி, கரைச்சி, இயக்கச்சி, பளை, உருத்திரபுரம், நீவில் ஆகிய பகுதிகளில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. கால்நடைகளின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டு, அவை புண்ணாக மாறுவதனால், பால் உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்படுவதாக பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த நோய் நுளம்பு, ஈ மற்றும் உண்ணிகள் மூலம் பரவக்கூடியதாகும் என கிளிநொச்சி பிராந்திய கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் கால்நடை வைத்தியர் சுப்பிரமணியம் கஜரஞ்சன் தெரிவித்துள்ளார். எனவே, கால்நடை போதானாசிரியர்கள் அல்லது கால்நடை வைத்தியர்களை தொடர்புகொண்டு இந்த நோய்க்கான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறு பண்ணையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பெரியம்மை நோய்க்கு உள்ளான கால்நடைகளை தனிமைப்படுத்தி, பராமரிப்பதன் மூலம் நோயை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரியில் இந்நோயின் தாக்கம் மிக வேகமாக பரவி வருவதாக வட மாகாண கால்நடை உற்பத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.