Home » பொது வேட்பாளரைக் களமிறக்குவதும் தேர்தலைப் பகிஷ்கரிப்பதும் ஒன்றல்ல – சுரேஷ் பிரேமச்சந்திரன்!

பொது வேட்பாளரைக் களமிறக்குவதும் தேர்தலைப் பகிஷ்கரிப்பதும் ஒன்றல்ல – சுரேஷ் பிரேமச்சந்திரன்!

Source

தமிழ்ப் பொது வேட்பாளர் என்பதும் பகிஷ்கரிப்பு என்பதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூறுவது போல் ஒன்றல்ல எனத் தெரிவித்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் விரைந்து முடிவெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் தரப்பிலிருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாகப் பேசப்பட்டு வந்த நிலையில் இப்போது அது ஒரு முக்கியமான கட்டத்தை வந்து சேர்ந்திருக்கின்றது.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியானது கொள்கை ரீதியாகப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்ற நிலையை ஏற்கனவே எடுத்திருந்தாலும் இந்தக் கூட்டணியில் இருக்கக்கூடிய ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ போன்ற கட்சிகள் இந்த விடயத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்கின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன.

அதாவது தமது கட்சிகளில் இருந்து ஒரு காத்திரமான ஒத்துழைப்புக்கள் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் நேற்று மட்டக்களப்பில் ஒன்றுகூடிய ரெலோ உயர்மட்டக் குழு, பொது வேட்பாளர் தொடர்பான நிலைப்பாட்டை முன்னெடுத்துச் செல்வதற்குத் தாங்கள் பூரணமான ஒத்துழைப்புக்களை சகல தரப்புக்களுக்கும் வழங்குவதாக அறிவித்திருக்கின்றார்கள்.

அதேபோல் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியானது தனது அரசியல் பீடக் கூட்டத்தை கூட்டி இந்தப் பொது வேட்பாளர் என்ற விடத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும், எங்களுடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய தமிழ் சிவில் அமைப்புகள், கட்சிகள் அனைத்தையும் இணைத்து இந்த விடயத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் நாங்கள் முடிவெடுத்திருக்கின்றோம்.

இதைப் போலவே ஏனைய கட்சிகளும் தங்கள் கட்சிகளின் உயர் பீடங்களைக் கூட்டி தமது முடிவுகளை இன்னும் சில தினங்களில் வெளியிட இருக்கின்றார்கள்.

இவ்வாறு தமிழர் தரப்பிலிருந்து ஒரு பொது வேட்பாளரை நியமிப்பது என்ற விடயம் பல்வேறு தரப்பினரதும் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் சமூக மட்டத்தில் இருக்கக்கூடிய பல்வேறுபட்ட அமைப்புகள், சங்கங்கள் இப்போது தமது ஆதரவை வழங்கி வருகின்றனர். குறிப்பாக வர்த்தக சங்கங்கள், கூட்டுறவாளர்கள், மீன்பிடியாளர்கள் சங்கங்கள், விவசாய சங்கங்கள் போன்ற பல அமைப்புகளும் முன்வந்து இன்றைக்கு ஆதரவை வழங்கியிருக்கின்றன.

அந்தவகையில் பொது வேட்பாளர் என்ற விடயத்தைப் பற்றி இப்போது அரசியல் கட்சிகள் பலவும் ஆலோசித்து வருவதுடன் அவற்றை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இங்கே ஒரு கோரிக்கையை நான் முக்கியமாக முன்வைக்க வேண்டும். தமிழரசுக் கட்சியானது ஒரு சமஷ்டி அரசியல் அமைப்பைத் தமது நோக்கமாகக் கொண்டு தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான அரசியல் கட்சி மாத்திரமல்ல நாடாளுமன்றத்தில் தமிழர் தரப்பில் இருந்து கூடுதலான ஆசனங்களையும் வைத்திருக்கக்கூடிய ஒரு கட்சியாக இருக்கின்றது.

ஆகவே, வரக்கூடிய இந்த ஜனாதிபதித் தேர்தலை எவ்வாறு கையாண்டால் தமிழ் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ளலாம், தமிழ் மக்களுடைய எதிர்காலத்தைச் சரியான பாதையில் கொண்டு செல்லலாம் என்று சிந்தித்து விரைவாக முடிவை எடுக்க வேண்டிய ஒரு பணி அவர்களுக்கு இருக்கின்றது.

ஆனால், அவற்றை அவர்கள் ஒத்திவைத்து நாங்கள் காலம் வரும்போது முடிவெடுப்போம் என்று சொல்வது நிச்சயமாக தமிழர்களுடைய எதிர்காலத்திற்கு உகந்த கருத்துக்கள் அல்ல.

ஆகவே, தமிழ் மக்களுடைய நலன்களைக் கருத்தில்கொண்டும் தமிழ் மக்களுடைய உரிமைகளைப் பெற்றுக்கொள்வதைக் கருத்தில்கொண்டும் தமிழ் மக்களுடைய எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டும் தமிழரசுக் கட்சியானது ஒரு சரியான முடிவை மிக மிக விரைவாக எடுத்து எல்லோருடனும் இணைந்து பயணிப்பதானது தமிழ் மக்களுக்கு நிச்சயமாக தேவையான ஒரு விடயமாகவே நாங்கள் கருதுகின்றோம்.

இந்தநிலையில் பொது வேட்பாளர் விவகாரத்தைத் தனிப்பட்டவர்களாக எதிர்த்தும் ஆதரித்தும் கருத்துக்கள் சொல்வது என்பதை மாற்றி கட்சியாக முன்னெடுத்துச் செல்வது என்பது இந்தக் காலத்தினுடைய அவசியம் என்பதைப் புரிந்துகொண்டு தமிழரசுக் கட்சி செயற்பட வேண்டும் என்பது எமது தாழ்மையான கருத்தாகவும் வேண்டுதலாகவும் முன்வைக்க விரும்புகின்றோம்.

மேலும், தமிழரசுக் கட்சியில் இருக்கக்கூடிய ஒரு சிலர் குறிப்பாக சிவஞானம் போன்றோர் ஒரு பொது வேட்பாளரை நாங்கள் தேடுகின்றபோதே இந்த விடயம் முடங்கிப் போய்விடும் என்றும், இந்த வேலைகள் எல்லாம் முடக்கப்பட்டுவிடும் என்றும், இது அடுத்த கட்டத்தை நோக்கி நகராது என்ற பாணியிலும் கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

உண்மையாகவே இந்த முயற்சி என்பது தோற்றுப் போக வேண்டும் என்று பல பேர் விரும்புகின்றார்கள். அதில் சீ.வீ.கே. சிவஞானமும் ஒருவராக சில சமயம் இருக்கலாம். ஏனென்றால் இந்த இந்த விடயம் வெற்றிகரமாக நகருமாக இருந்தால் சிங்களத் தரப்பு மாத்திரம் அல்ல சர்வதேச சமூகம் கூட அந்த ஆணையைப் பற்றி சிந்திக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்படும்.

ஆகவே, ஏதோ ஒரு வகையில் இதனைக் குழப்புவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டுத்தான் வருகின்றன. இது மேலும் நகரக் கூடாது, முடக்கப்பட வேண்டும் என்றும் சிந்திக்கிறார்கள். இவ்வாறு இதனை முடக்கினால் சந்தோசப்படுவதற்கும் சில பேர் இருப்பதாகத்தான் எங்களுக்குத் தோன்றுகின்றது.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் பொது வேட்பாளர் என்ற விடயம் இப்போது முன்னோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றது. கட்சிகளில் ஓரிருவரைத் தவிர மற்றைய அனைவரும் இதற்குப் பின்னால் இருக்கின்றார்கள்.

இதிலும் முக்கியமாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது ஐனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்புச் செய்ய வேண்டும் என்று இப்போது ஒரு துண்டுப்பிரசுரம் அடித்து வெளியிடுவது மாத்திரம் அல்லாமல் இந்த முயற்சிகளுக்கு எதிரான கட்டுக்கதைகளையும் அவர்கள் அவிழ்த்துவிட்டு வருகின்றார்கள்.

இன்னும் சில பேர் பகிஷ்கரிப்பும் பொது வேட்பாளரும் ஒன்றுதான் என்ற விதமான கருத்துக்களையும் சொல்லி வருகின்றார்கள். உண்மையில் பகிஷ்கரிப்பும் பொது வேட்பாளரை நிறுத்துவதும் ஒன்றல்ல. இந்தத் தேர்தலுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. இந்தத் தேர்தலுக்கு நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவசியமில்லை என்ற கருத்தைத்தான் அவர்கள் முன்வைக்க முயற்சிக்கின்றார்கள்.

இந்த ஜனாதிபதித் தேர்தல் என்பது இலங்கையில் நடக்கக்கூடிய தேர்தல். இலங்கை என்ற நாட்டுக்குள் தமிழர், முஸ்லிம், சிங்களவர் என்ற அனைவரும் வாழ்கின்றார்கள். இவ்வாறான சூழ்நிலையில் இந்தத் தேர்தலுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்வது முதலாவதாக அர்த்தமற்ற விடயம்.

இரண்டாவதாக இந்தத் தேர்தலை நாங்கள் ஏன் பாவிக்க விரும்புகின்றோம் என்றால் முக்கியமாக இலங்கையில் இருப்பது வெறுமனே ஒரு பொருளாதாரப் பிரச்சினை மாத்திரம்தான், அந்தப் பொருளாதாரப் பிரச்சினை தீர்ந்து விட்டால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்று அரசு இலங்கையிலும் வெளி உலகத்துக்கும் சொல்லிக்கொண்டிருக்கின்றது.

எனவே, புரையோடிப் போயிருக்கின்ற தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் பொருளாதாரப் பிரச்சினை தீர்க்கப்படமாட்டாது என்பதை உலகறியச் செய்யவும், சிங்கள மக்களுக்குப் புரிய வைக்கவும் வேண்டும்.

இந்நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயமும் பகிஷ்கரிப்பு என்ற விடயமும் ஒன்றல்ல. ஆனால், இரண்டும் ஒன்று என்று தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு முயற்சியை இந்தத் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செய்கின்றார்கள்.

மேலும் பகிஷ்கரிப்பால் எதனையுமே சாதிக்கப்போவது கிடையாது. வெறுமனே துண்டுப்பிரசுரங்களை அடித்து அனைத்து மக்களுக்கும் கொடுத்து விடலாமே தவிர இந்தப் பகிஷ்கரிப்பின் மூலம் நிச்சயமாக எதனையுமே சாதிக்கப்போவது கிடையாது.

அத்தோடு மக்களை வாக்களிக்க வைக்கவே பொது வேட்பாளர் என்ற விடத்தை நாங்கள் எடுத்துள்ளதாகவும் தமிழ்த் தேசிய முன்னணியினர் சொல்கின்றார்கள். உண்மையில் பொது வேட்பாளரை நிறுத்துகின்றபோது மக்கள் போக வேண்டும் என்பதும், அவர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதும் மிக மிக முக்கியமான விடயம்.

பொது வேட்பாளர் என்ற விடயத்தை நாங்கள் முன்னெடுக்கக்கூடிய நிலையில் ஆதரவு கோரி இன்னும் சில தினங்களில் ஜே.வி.பி.யினர் யாழ்ப்பாணம் வருகின்றார்கள். அதேபோல் மற்றவர்களும் இங்கு வரவிருக்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள இந்தக் கால நேரத்தை நாங்கள் சரியான முறையில் கையாள வேண்டும் என்பது முக்கியமான விடயம்.” – என்றார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image