உலக சந்தையில் எரிபொருள் விலை தொடர்ந்து குறைந்து வந்தாலும், அதனுடன் இணைந்த வகையில் இலங்கையில் எரிபொருள் விலையை உடனடியாகக் குறைக்கும் வாய்ப்பு இல்லை என்று நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார்.
கேள்வி: அமைச்சர் அவர்களே, சமீபத்தில் இலங்கை பெற்ற எரிபொருட்களின் விலை குறைந்துள்ளதா? அதைப் பற்றிய எண்ணிக்கைக் கணக்குகளை கூற முடியுமா?
பதில்:
“எங்களுக்கு இனி கிடைக்கவிருப்பவை கடந்த மாதங்களில் வாங்கப்பட்ட எரிபொருட்கள்தான். பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலை நிர்ணயம் முன்பு வாங்கிய எரிபொருட்களின் சராசரி விலையை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. எங்களிடம் உள்ள சேமிப்பு வசதிகள், தேவை மற்றும் விநியோகத் திட்டங்களை கருத்தில் கொண்டு முன்கூட்டியே கொள்முதல் செய்யப்படுகின்றன.
எனவே, எதிர்காலத்தில் பயன்படுத்தப்படவுள்ள எரிபொருட்களில் பெரும்பாலானவை அதிக விலையில் வாங்கப்பட்டவையாகும். தற்போது உலக சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் எரிபொருட்களை நாம் பின்னர்தான் பெற முடியும். அதற்குச் சில காலம் எடுக்கும்.
எனினும், எதிர்காலத்தில் விலை குறையும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதற்கமைய, தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணத்தை நீக்காமல், தற்போதைய விலையைத் தொடர்வதோ அல்லது மேலும் குறைப்பதோ குறித்து எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும்.”
இந்தக் கருத்துகளை அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ நேற்று (17) அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பான விசேட ஊடக சந்திப்பில் வெளியிட்டார்.
The post இலங்கையில் எரிபொருள் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது appeared first on LNW Tamil.